குரல் நசுக்கப்படும்..தமிழ்நாட்டுக்கு ஆபத்து! இந்தியாவை காக்கும் திமுக..முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தமிழ்நாடு, நாம் அழைத்து இருக்கும் பிற மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது எனவும், நாளை இது தொடர்பாக நடக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் என கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கை குறையும் என திமுக குற்றம் சாட்டி உள்ளது. இதை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனை நாம் தமிழர், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அதே நேரத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
அதன் முடிவில் நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நேரில் சென்று திமுக அமைச்சர்களும், எம்பிகளும் வழங்கினர். நாளை இந்த கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் எடுக்கப்படும் முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் என நம்பிகை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. இதனை திமுக தான் பேசுபொருளாக்கியது. திமுக ஏன் நாடாளுமன்ற மக்களவை தொகுதி பங்கீடு விஷயத்தில் இவ்வுளவு போராடுகிறது என்றால், தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் இருந்தால், நமது எம்.பி எண்ணிக்கை பாதிக்கப்படும்.
இது நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனாலேயே தமிழ்நாட்டில் மாநில அளவிலான அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பாஜக தவிர பிற அனைத்து கட்சியும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக பாதிக்கப்படும் பிற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டுமென முடிவெடுத்தோம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிற கட்சிகளுக்கும் கடிதம் எழுதினேன்.
சிலரிடம் நானே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அவர்களை மாநில அமைச்சர், எம்.பி தலைமையிலான குழு சந்தித்து விவரித்து நான் எழுதிய கடிதத்தை வழங்கினர். சிலர் நேரில் வருவதாகவும், சிலர் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக கூறி இருக்கிறது. முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தமிழ்நாடு நாம் அழைத்து இருக்கும் பிற மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும். உரிமைகள் நிலைநாட்ட முடியாது. இது மாநிலத்தை அவமதிக்கும் செயல். எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, ஒன்றிய அரசுக்கு சிறப்பாக செயல்பட்டு ஊக்குவித்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை கொடுக்க கூடாது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்கை கட்சிகளோட ஒருங்கிணைப்படி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அதனாலேயே பிற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications