ஆடு பகை.. குட்டி உறவா.. அமைச்சர்களுக்கு எதிராக.. மாவட்டச் செயலாளர்களை கொம்பு சீவி விடும் ஸ்டாலின்!
சென்னை: ஆடு பகை குட்டி உறவு என்ற வகையில் திமுக தலைமை அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் மாவட்டச் செயலாளர்களோ அதிமுக அமைச்சர்களிடம் நட்பு பாராட்டி வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செம டென்ஷனை கொடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை திமுக, அதிமுக கட்சி தலைமை நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக பரஸ்பரம் வணக்கம் கூறி கொள்ளுதல், நலம் விசாரித்தல் இப்படித்தான் இருந்தனர். அது போல் தொண்டர்களும் பரஸ்பரம் எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டனர்.

டெண்டர்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் திமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்கள். இதன் மூலம் டெண்டர்கள், டாஸ்மாக் மதுபான பார் ஏலம், ஏரியில் மீன் குஞ்சு வளர்ப்பதற்கான டெண்டர் என பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

அண்ணா அறிவாலயம்
இந்த விவகாரங்கள் அண்ணா அறிவாலயத்தின் காதுகளை எட்டிய போதிலும் பணம் சம்பாதிக்கத்தானே, பிழைக்கட்டும் என தலைமை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டது. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள், முதல்வர் என திமுகவை யார் விமர்சித்தாலும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும், மூத்த நிர்வாகிகள் மட்டுமே பதில் அளித்து வருகிறார்கள்.

கோபம்
ஆனால் திமுக மாவட்டச் செயலாளர்கள் இது பற்றி கண்டுகொள்ளாதது ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் வேட்பாளர் தேர்வு செய்யும் உத்தேச லிஸ்டிலும் வெற்றி பெறாத செல்வாக்கு இல்லாத ஆட்களையே இந்த மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களாக பரிந்துரைத்ததால் ஸ்டாலினின் கோபம் அதிகமானது.

எம்எல்ஏக்கள்
இதற்கு ஒரே விஷயம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர்களை நிறுத்துவது என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சரை எதிர்த்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவால் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம் மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications