கருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்டாலினும், செல்வியும் இணைந்து நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலினும், செல்வியும் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்தனர்.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. அவரின் பெருமைகளை, சாதனைகளை இன்னும் பல்லாண்டுகாலத்திற்கு மக்கள் நினைவுகூற வேண்டும் என்கிற நோக்கில் அருங்காட்சியகம் உருவாக்கப்படவுள்ளது. சென்னையில் கலைஞர் நினைவாக அவரது நினைவிடம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளதால், சென்னையை தாண்டி ஒரு ஊரில் அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தாராம் ஸ்டாலின்.
முதலில் திருச்சியில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும், பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டூர் கிராமத்தில் அமைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இப்போதே பிரபல கட்டிட வடிவமைப்பாளர்களிடமிருந்து மாதிரி கட்டிடங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications