வாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..!
சென்னை: வாரிசு அரசியலை பற்றி பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல் நிரம்பி வழியும் கட்சி பாஜக தான் என அவர் விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் உரையாடிய போது அவர் கூறியதாவது;

ஆன்மிக அவதாரம்
தி.மு.க.வை நேரடியாக வீழ்த்த முடியாதவர்கள் பல்வேறு மறைமுக அஸ்திரங்களை எய்து வருகிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதனைக் காரணமாகக் காட்டி தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு ஆன்மீகத்தைக் காக்க யார் யாரோ அவதாரம் எடுத்ததாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் கோவில்களை, அறநிலையத் துறையைக் காத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

அறநிலையத்துறை
ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியவர் மட்டுமல்ல, இந்த நெல்லையப்பர் கோவில் திருப்பணிகளைச் செய்தவரும் முதலமைச்சர் கலைஞர் தான்! 1970-ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சரோ, சட்டப்பேரவையில் அறநிலையத் துறைக்கு எனத் தனி விவாதமோ நடந்தது இல்லை. வேறு ஏதாவது ஒரு துறையோடு சேர்த்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை நடத்துவார்கள். முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது. இது அவர்களுக்குத் தெரியுமா?

பக்தர்களுக்கு வசதி
கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆணையிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அங்கேயே சென்று தங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இது அவர்களுக்குத் தெரியுமா?1967 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளைச் செய்து காட்டிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

திமுக ஆட்சியில்
1996 - 2001 காலக்கட்டத்தில் 2,459 கோவில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் நடந்தன. 2006 - 2011 காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 539 கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டு வந்து சேர்த்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்! அவரது ஆட்சியில்தான் கோவில் சொத்துக்களும் அதிகம் ஆனது! கோவில்களின் வருமானமும் அதிகம் ஆனது!

பரிதாபப்படுகிறேன்
தி.மு.க. ஆட்சிக் காலக் கோவில் திருப்பணிகளை தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார், திருப்பனந்தாள் மடாதிபதி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள் போன்றவர்கள் வாயாரப் பாராட்டினார்கள் என்பது தான் வரலாறு! இந்த வரலாறு எதுவும் தெரியாமல் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப் போல சிலர் கிளம்பி இருக்கிறார்கள்.

மக்களை பிரிக்க சூழ்ச்சி
இந்து மதத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்தது போல நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, இவர்கள் இந்து மதக் காப்பாளர்கள் அல்ல. வளராத தங்கள் கட்சியை வளர்க்க, இந்து மதத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஒன்றாக வாழும் மக்களை பிரிக்கப் பார்க்கிறார்கள்.

வேற்று கிரகத்தில் இருந்தாரா?
கடந்த 22-ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பது போல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியல் போடத் தயாரா என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.

ஸ்டாலின் விளக்கம்
இதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடக்கவிழாவில்தான் கேட்கிறார் அமித்ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தான். 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான்.

அமித்ஷா ஷோ
அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, தி.மு.க. தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சர் அமித்ஷாவுக்கோ பா.ஜ.க.வுக்கோ அருகதை இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பா.ஜ.க.

மிரட்டி பணியவைத்தது
2016-ஆம் ஆண்டு தமிழகத்துக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷா என்ன சொன்னார், 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி தான்' என்று சொன்னார். அத்தகைய அம்மாவின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கும் பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இருக்கிறதா?பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடித்த கொள்ளையை வைத்து மிரட்டி பா.ஜ.க. பணிய வைத்ததா, அல்லது அடித்த கொள்ளையில் இருந்து தப்பிக்க அவர்கள் பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்தார்களா என்பது எனக்குத் தெரியாது.

கலைஞரின் மகன்
ஆனால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கும், அவர்களைக் காப்பாற்றும் பா.ஜ.க.வுக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். மு.க.ஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித்ஷா சொல்வாரானால்; ஆம்! நான் அரசியல் வாரிசு தான்! நான் கலைஞரின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை.நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு!
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications