8 வழிச்சாலை விவகாரம்... பாஜக மற்றும் அதிமுக அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் -ஸ்டாலின்
சென்னை: 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்தாக மத்திய அரசின் வாதமே காரணம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விவசாயிகள்
விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் இயற்கை - சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தீர்ப்பு ரத்து
குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கிய காரணமாகும். மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாகக் காரணம் ஆகிவிட்டது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு- வளர்ச்சி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.

திட்டத்தை கைவிடுக
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. ஆகவே சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு. பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications