மகாராஷ்டிரா: அநாகரீகமா.. அசிங்கமா.. வெட்கக் கேடா.. என்னன்னு சொல்வது.. ஸ்டாலின் பாய்ச்சல்
Recommended Video
சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி தலைமையிலான கூட்டணி அரசு உருவாவதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவும் முடிவு செய்திருந்தன.
ஆனால் மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான ஆட்சி இன்று பொறுப்பேற்றது. இதில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்.
அசிங்கம்
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?
கடுமை
'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
தலையாட்டி பொம்மை
அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? - பாஜக சித்து விளையாட்டு என்பதா?
ஜனநாயகத்தின் முகத்தில் கரி
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! என தெரிவித்துள்ளார் ஸ்டாலின். மகாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி! என பாமக நிறுவனர் ராமதாஸும் கடுமையாக விமர்சித்துள்ளார்.