58 பேர் நியமனத்திற்காக எந்த அர்ச்சகரும் நீக்கப்படவில்லை.. சட்டசபையில் முதல்வர் விளக்கம்
சென்னை: தற்போது கோயில்களில் ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை என மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பல்வேறு கோயில்களில் பணியாற்ற ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
பழைய அர்ச்சகர்களை நீக்கிவிட்டு புதிய அர்ச்சகர்களை திமுக அரசு நியமித்ததாக பலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த திட்டம் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்திருந்தார்.

அவர் கூறுகையில் எந்த கோயிலிலும் அர்ச்சகரையோ பட்டாச்சாரியரையோ நீக்கிவிட்டு இந்த 58 பேருக்கு நாங்கள் பணி ஆணை கொடுக்கவில்லை. யாரோ வேலையில்லாதவர்கள் விஷமத்தனமான கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். நிறைய கோயில்களில் 70 ,75 வயதினரும் அர்ச்சகர்களாக உள்ளனர். அவர்களை நாங்கள் நீக்கவில்லை.
அவர்களும் பணியாற்றலாம் என்றுதான் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எங்காவது யாரையாவது நீக்கிவிட்டதாக தகவல் கிடைத்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு பணிநியமனம் செய்கிறோம் என்றார் சேகர் பாபு. இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
அந்த விவாதத்தின் ஒரு பகுதியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போதும் தெளிவாக விளக்கிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் எப்போதும் கைவிடப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் அதை பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டனர். தற்போது நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். இதற்காக யாரையும் விடுவித்து பணி நியமன ஆணை வழங்கவில்லை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் ஏற்கனவே பணியிலிருந்த அர்ச்சகர்களுக்கு பாதிப்பு இல்லை. கொச்சைப்படுத்த வேண்டும் என்றே அரசியலுக்காக சிலர் குறை கூறுகிறார்கள். சமூகநீதியை சீர்குலைப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications