பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை... அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க பிரதமர் மோடி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சீன எல்லை பிரச்சனை விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஸ்டாலின் கூறினார்.
இதுமட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் என அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதன் தமிழாக்கம் பின்வருமாறு;

ஆழந்த இரங்கல்
இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, அன்பு வணக்கம். முதலில், எல்லையில் இறுதிவரை போராடி- தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள - அனைத்து இந்திய இராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் திரு. பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கிரமிப்பு முயற்சி
மாண்புமிகு பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், "உயிரிழந்த இராணுவ வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது". அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் மேலும் ஒருமைப்படுத்தி- நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கோவிட்-19 பேரிடருடனான போராட்டம்; இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி!

ஒரு தாய் பிள்ளைகள்
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம். இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலுடன் இருக்கலாம். நாட்டுப் பற்று என வந்தால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம்.

மோடியை ஆதரிப்போம்
பண்டித ஜவகர்லால் நேரு அவர்களாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தி அவர்களாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

2020-ல் தமிழக வீரர்
1962 இந்தியா - சீனப் போரின் போது, சீனாவை முதலில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். சில மணி நேரங்களிலேயே நிதி திரட்டி "பாதுகாப்பு நிதி" வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். 1962 போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன்.

வரவேற்பு
இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் - இராணுவ வீரர் பழனி அவர்களைத் தமிழகம் தியாகம் செய்திருக்கிறது.நாட்டைப் பாதுகாக்கத் திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள். "அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்" என்ற பிரதமர் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

துணை நிற்கும்
"இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது" என்றும் பிரதமர் அவர்கள் கூறியிருப்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்கிறேன்.எனவே, இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, மாண்புமிகு பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications