“சலசலப்புக்கு” அஞ்ச மாட்டேன்.. தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க “சதி” - முதலமைச்சர் ஸ்டாலின் பரபர
“நெசவாளர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.”
சென்னை: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிலர் குலைக்க பார்க்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அனைவரும் ஒற்றுமையோடு வாழும் மாநிலம் என்று தெரிவித்த அவர், இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்றார். மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க உள்ளதாவது அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுகதான் எப்போதும் நெசவாளர்களின் துயர் துடைக்கும் கட்சி.

கைத்தறி ஆதரவு நாள்
ஆடை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் கடமை என்று நினைக்கிறேன். 1949 ஆம் ஆண்டு திமுக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி கைத்தறி ஆதரவு நாளை திமுக கொண்டாடியது.

திராவிட மாடல் அரசு
அப்போது பேரறிஞர் அண்ணா திருச்சி வீதியிலும், கருணாநிதி சென்னை வீதியிலும் கைத்தறி ஆடைகளை தங்களின் தோளில் சுமந்து விற்பனை செய்தார்கள். கைத்தறி என்பது அப்போது இயக்கமாக மாறியது. பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

நூல் விலை உயர்வு
நூல் விலை உயர்வு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. நெசவாளர்களுக்கு என பல்வேறு உதவிகளை அரசு கேட்காமலேயே செய்து கொடுத்தது. நெசவாளர்களை அச்சுறுத்தி வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டண சலுகை
தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும் நெசவாளர்களின் பயன்பெறுவார்கள் என்று மின் கட்டண சலுகையை வழங்கி வருகிறது. நெசவாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். திமுக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

ஒற்றுமையை குலைக்க சதி
நெசவாளர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாடு அனைத்து மக்களும் ஒற்றுமையோடு வாழும் மாநிலமாகும். ஆனால், சில தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள். நான் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்." என்றார்.

அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்வில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.












Click it and Unblock the Notifications