ஒரு கோலத்தை அழிக்க நினைத்தீர்கள்.. தமிழகமே போர்க் கோலம் வரைகிறது.. எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் நன்றி!
சென்னை: ஒரு கோலத்தை அழிக்க நினைத்தீர்கள். இன்று தமிழகமே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென சென்னை பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இது போல் கோலம் வரைந்த 6 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

என்ஆர்சி
இதற்கு ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கனிமொழி வீட்டிலும், இன்று காலையும் என்ஆர்சிக்கு எதிரான கோலமிட்டிருந்தனர்.

திருப்பூரில் சாலை
அது போல் சென்னை முகப்பேர், சேலம் ஆகிய இடங்களில் திமுக மகளிரணி சார்பில் கோலம் போடப்பட்டது. இன்னும் சில இடங்களில் நோ என்ஆர்சி, நோ சிஏஏ என மெஹந்தியில் கைகளில் எழுதப்பட்டது. திருப்பூரில் சாலையில் பெயிண்டில் எழுதப்பட்டது.

இளைய சமுதாயம்
இந்த நிலையில் பெசன்ட் நகரில் கோலமிட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர். இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.

தமிழ்நாடே போர்க்கோலம்
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! என ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications