அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் தஞ்சாவூரில் இன்று (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது நான்காம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமையான இன்று (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது.

இதில், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்ரல் 11) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதி வேட்பாளர்களையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications