வீடு தேடி வரும் நிவாரண நிதி? முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவ.19-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19-ந் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வெள்ள சேதம் மற்றும் நிவாரண நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலான மாவட்டங்களை வெளுத்து வாங்கிவிட்டது. தலைநகர் சென்னையில் இடைவிடாது கொட்டிய பெருமழையால் அனைத்து பகுதிகளும் வெள்ளக் காடாகின.

முதல்வர் ஆய்வு
தமிழகம் முழுவதும் இயல்பான மழைப் பொழிவை விட கூடுதல் மழை பெய்திருக்கிறது. தற்போதும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையைப் போல டெல்டா மாவட்டங்களும் கன்னியாகுமரி மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு நடத்தி இருக்கிறார்.

வெள்ள நிவாரணம் அறிவிப்பு
மேலும் வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். நடவு செய்து 15 நாட்களைத் தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6083 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும், சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க ரூ300 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நவ.19-ல் அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள், வெள்ள நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 19-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ5,000 அல்லது தலா ரூ3,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

அண்ணாமலை ட்வீட்
இதனிடையே முதல்வரின் வெள்ள நிவாரண அறிவிப்புகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நிவர் புயல் சமயத்தில் கோரிய 30 ஆயிரம் ரூபாயை ஒரு ஹெக்டேருக்கு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications