“தங்கம்” பேச்சை கேட்டீங்களா? சிலாகிக்கும் ஸ்டாலின்! 1.065 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையாமே
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் மாதம்தோறும் பயன்பெற உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர்.
மகளிர் நலத் திட்டங்களில் புது அத்தியாயமான இத்திட்டம் குறித்தும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதில் நமது அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தியும் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்றைய 'தி இந்து' நாளேட்டில்..." என்று குறிப்பிட்டு அவரது பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாடு வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளது. இந்தியாவில் வாழும் பெண்களின் நலனை மறுவடிவமைப்பு செய்யும் ஒரு அற்புதமான முன்முயற்சி இதுவாகும். பல மாநிலங்கள் ஊக்கமடையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது." என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில நாளிதழ் பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.
நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்." என குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications