ஸ்டாலின் செய்வதை செய்யத் தவறிய எடப்பாடி.. செங்கோட்டையன் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்!
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், திமுக முதலில் கட்சிக்குள் நிலவி வரும் நிர்வாகிகள் இடையிலான மோதலை களைவதற்கு சரியாக யுக்தியை கையாண்டு வருவதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவில் மாநிலம் முழுவதும் அறிந்த முகமாக ஏராளமானோர் இருப்பது, அந்த கட்சிக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கி இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் கோவையில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் அதிமுக உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்று செங்கோட்டையன் பேசி வருகிறார். இதற்காக டெல்லி வரை சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதில் செங்கோட்டையன் தீவிரமாக உள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். தற்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டால் மட்டுமே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவோம் என்று கூறத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் அதிமுக உட்கட்சி பூசலில் சிக்கி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் அதிமுகவை விட திமுக சற்று நிதானமாக செயல்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மக்களை சந்திப்பதற்கு முன்பாக கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையில் இருக்கும் மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்குகள் சரியாக விழும் என்று திமுக தலைமை கணக்கிட்டுள்ளது.
அதற்கேற்ப உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து வருகிறார். அதேபோல் ஆ.ராசா, கே.என்.நேரு, எவ வேலு உள்ளிட்டோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளிடையே இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய ஆலோசித்து வருகின்றனர்.
திமுக கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்த பின், மக்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவை விடவும் பிரச்சாரத்தில் திமுக ஒரு படி முன் நிற்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் துணை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து இளைஞரணியை தயார் செய்து வருகிறார். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்.
அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், மாநிலம் முழுவதும் பிரபலமானவர்கள் யாரும் இல்லாதது பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications