கலைஞருக்கு 4 மகன்கள்.. நான் இறந்தாலும்.. 18 வயதிலேயே முழங்கினேன் - விஜய் டிவியில் ஸ்டாலின் ஓபன் டாக்
சென்னை: தமிழுக்காகவும் இனத்துக்காகவும் உயிரை விடுவேன் என்று 18 வயதில் மேடையில் தான் உரையாற்றியதாக விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் வீடியோ வாயிலாக பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
விஜய் டிவியில் தமிழ் பேச்சாளர்களுக்கான "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் நடுவர்களாக பேராசிரியை பர்வீன் சுல்தானா மற்றும் பேராசிரியரும் நடிகருமான ஞானசம்பந்தன் ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சியை நகைச்சுவை கலைஞரும் தமிழ் பேச்சாளருமான ஈரோடு மகேஷ் மற்றும் தமிழ் செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும் வீடியோவும் அதில் திரையிடப்பட்டது. அதில் தமிழ் மொழி குறித்தும் தன்னுடைய முதல் மேடை பேச்சு பற்றியும் ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரையில், தமிழின் தொன்மைதனை தரணிக்கு உணர்த்திடுவோம். எளிமைதனை பயன்படுத்தி எல்லார்க்கும் தமிழ் அறிவு ஊட்டிடுவோம்.." என்ற பாடலுடன் பேச்சை தொடங்கினார்.
"இது இளம் வயதில் நான் மனப்பாடம் செய்த பாடல். இன்று வரை மறக்காத பாட்டு. ஏனென்றால் இது தமிழ் பாட்டு. தமிழனத் தலைவர் கலைஞரின் பாட்டு இது. தமிழ் பேச்சு எனது மூச்சாக சிறு வயதிலேயே மாறியது. 18 வயதில் கோவையில் நடந்த மாணவர் மாநாட்டு பார்வையாளராக சென்றிருந்தேன். அப்போது அழைப்பிதழில் பெயர் போடும் அளவுக்கு முக்கிய பேச்சாளராக நான் இல்லை.
எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தர முடியுமா என்று மாநாட்டு பொறுப்பாளரிடம் கேட்டேன். அனுமதி கொடுத்தார். 'மொழிக்காக, நம்முடைய இனத்துக்காக போராடுகிறோம். போராடும் இந்த நேரத்திலே நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தை செய்வதற்கும் காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு 4 ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எனவே அந்த 4 ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளைபோய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அதுவும் மொழிக்காக ஒரு இனத்திற்காக தணயனை இழந்த தந்தை என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும். அத்தகைய பாராட்டும் பெருமையும் வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னை வந்து சேரும் அல்லவா. எனவேதான் நான் சொல்கிறேன், எத்தகைய தியாகத்தை செய்வதற்கும் தயார்! தயார்! என்று நான் முழங்கினேன்.
தமிழ்தான் என்னை போன்ற ஏராளமான இளைஞர்களை அன்றைய தினம் அரசியல் களத்தில் ஆளாக்கி வளர்த்தது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று இந்த நிகழ்ச்சிக்கு வைத்த பெயரை பார்க்கும்போது இந்த நிகழ்வுகள்தான் என் நினைவுக்கு வந்தன. தமிழ் நிலத்தில் பேச்சுக் கலை தனித்துவமானது. சமூகத்தையே புரட்டிப்போட்ட ஆற்றல் பேச்சுக் கலைக்கு உண்டு. எழுத்தறிவும், கல்வி அறிவும் பெரிதாக இல்லாத அந்த காலத்தில் மேடைப் பேச்சும் நாடகங்களும்தான் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைவதற்கான ஊடகங்களாக விளங்கின.
'எழுமின் விழுமின் இல்லையேல் வீழ்ந்து விடுமின்' என்று முழங்கிய டிஎம் நாயரின் உரையும், 'தமிழா நீ தமிழன் என உணர்ந்து மான அறிவு கொள்!' என எழுந்த தந்தை பெரியார் ஆற்றிய உரையும், 'ஏ தாழ்ந்த தமிழகமே..' என விழித்து பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையும், 'தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி எரிந்தாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.' என்ற தமிழினத் தலைவர் கலைஞரின் கனல் உரையும் ஒலித்த மண் இந்த தமிழ்நாட்டு மண்.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நம் மண்ணில் பேச்சாற்றல் கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து வளர்த்தெடுக்கக் கூடிய நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியடைந்த பல இளைஞர்கள் முன்னணி ஊடகங்களில் நெறியாளர்களாகவும், செய்தி வாசிப்பாளர்களாகவும், அரசியல் களத்தில் ஈடுபடுபவர்களாகவும், அரசு பணிகளில் மிளிர்ந்து வருகிறார்கள்.
இதுவே இந்த நிகழ்ச்சி தனது நோக்கத்தில் வெற்றிக்கண்டு உள்ளதற்கான சிறந்த சான்று. தொலைக்காட்சி என்றால் வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அது அறிவை ஜனநாயகப்படுத்தும் சாதனமும் கூட. தொலைக்காட்சியில் சமூகத்துக்கு பயனளிக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வழங்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் பல இளம் திறமையாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்கள் பல துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும். தமிழ்நாட்டு பேச்சுக் கலை பாரம்பரியம் தொடர்ந்து செழுமை பெற இத்தகைய நிகழ்ச்சிகள் உதவ வேண்டும். பயனற்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு வெற்றியடைய உளமாற வாழ்த்துகிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications