விஜய், முருகதாஸை கைது செய்ய வேண்டும்.. தனியரசு போர்க்கொடி
விஜய்யை கைது செய்ய வேண்டும் என தனியரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: சர்கார் படத்தில் அதிமுகவையும், மறைந்த ஜெயலலிதாவையும் விமர்சித்து பேசிய நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
சர்க்கார் படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்த பிரச்சனை இன்னும் முடியவில்லை. பாஜக, அதிமுக, என சகல கட்சிக்காரர்களும் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் பல வசனங்கள் அதிமுக அரசை கடுமையாக விமர்சிப்பதாக உள்ளதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சிவி சண்முகம் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

வசனங்களை நீக்குங்கள்
எனவே படக்குழுவே இந்த வசனங்களை எல்லாம் முழுவதுமாக நீக்கிவிட்டால் நல்லது, இல்லையென்றால் வழக்கு போடப்படும் என்றும் அமைச்சர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில், கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசும் இந்த படத்தை பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

எதிர்மறை சித்தரிப்பா?
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, "சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து எதிர்மறையாக சித்தரித்து உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அதை நீக்க கொங்கு இளைஞர் பேரவை போராடும். தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் குறைபாடுகள் செயல்பாடுகளை சுட்டி காட்டுவோம்" என்று கூறியிருந்தார்.

கைது செய்ய வேண்டும்
அதேபோல, ஒரு தனியார் டிவியில் விவாதத்தில் கலந்து கொண்டபோதும், "எண்ணற்ற உதவிகள், நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது. ஆனால் இந்த அரசை பற்றியும், மறைந்த ஜெயலலிதா பற்றியும் சர்க்கார் படத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்" இவ்வாறு தனியரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications