"பாசிசமா, பாயாசமா என ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.." விஜய்யை மறைமுகமாக சாடிய ஜவாஹிருல்லா
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். பாசிசமா பாயாசமா என ஒருவர் சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறார் என்றும் அது மிகவும் ஆபத்தான பேச்சு என்றும் ஜவாஹிருல்லா சாடியுள்ளார்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

ஜவாஹிருல்லா
இந்த பொதுக்கூட்டத்தில் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், "பாசிசமா.. பாயாசமா என ஒருவர் சிறுபிள்ளைத் தனமாகப் பேசியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது. இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வருவது நிச்சயம் தமிழகத்திற்குப் பேராபத்தாக முடியும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்காது ஆனால், நமது முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அப்போது அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய எழுச்சி மிக்க பேரணியை நடத்தி பாஜகவுக்குச் சவாலாக இருந்தார்.
குடியுரிமை சட்டத்தை நிச்சயம் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என ஆட்சிக்கு வரும்போது தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றார். அதேபோல ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றி, சொன்ன வாக்கைச் செயல்படுத்தினார்" என்றார்.
வேல்முருகன்
மேலும், இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "திமுக கட்சிக் கொடியைப் பிடித்து.. பெரியார், அண்ணா, பேராசிரியர், கலைஞர் கரம் பிடித்த இந்த மாநில முதல்வர் 72 வயதில் அடியெடுத்து வைக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த நமது முதல்வர், நமது நாட்டின் ஜனநாயகம்,மாண்புகளைக் காக்கும் மதச்சார்பற்ற மக்களுக்கான கூட்டணியை உருவாக்குவதில் மகத்தான தலைவராக உயர்ந்து நிற்கின்றார்" என்றார்.
பெ.சண்முகம்
அதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் சார்பில் 'அப்பா'என்ற ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் என்பது பெற்ற அப்பா கூட பிள்ளைக்குத் தருவதில்லை. பெண் குழந்தைகளுக்குக் கல்வி எதற்கு என்று பெற்ற அப்பா கூட கேட்பார்..
ஆனால் நம்முடைய முதலமைச்சர் கல்லூரி செல்லுங்கள்.. நீங்கள் படித்தால் மட்டும் போதும் என்று சொல்லும் அளவுக்குப் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். 2021ல் திமுக கூட்டணி எப்படி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதேபோன்ற வெற்றியை 2026ம் ஆண்டிலும் பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications