வெளிநாடு பயணம்! ஸ்டாலினுக்கு ஒரு நீதி! பிரதமர் மோடிக்கு ஒரு நீதியா? ஆளுநருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறிய ஆளுநர் இந்திய பிரதமருக்கும் அதே அளவுகோலை பின்பற்றுவாரா? என
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வினவியுள்ளார்.
அன்றாடம் தேவையற்ற அரசியலைப் பேசி தமிழ்நாட்டில் தேவையற்ற சலசலப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் என அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி. உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது, "நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டின் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறியுள்ளார்.
2019 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். புளூம்பெர்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும். இதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், அதனை பாலமாக இருந்து நான் தீர்த்து வைப்பேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது வைத்த விமர்சனத்தை பிரதமர் மோடி அவர்களின் மீதும் ஆளுநர் வைப்பாரா? தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் மீது காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை தெரிவித்து வரும் ஆளுநரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது.
அன்றாடம் தேவையற்ற அரசியலைப் பேசி தமிழ்நாட்டில் தேவையற்ற சலசலப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications