நல்லா பாருங்க.. என்னை யார்னு தெரியுதா.. சொல்லி சொல்லியே வாக்கு கேட்கும் "மய்யம்" மவுரியா!
மக்கள் நீதி மய்ய வடசென்னை வேட்பாளர் மவுரியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை: "நல்லா பாருங்க.. என்னை யார்னு தெரியுதா.." என்று சொல்லி சொல்லியே பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி ஓட்டு கேட்டு வருகிறார் மக்கள் நீதி மய்ய வடசென்னை வேட்பாளர் மவுரியா.
மக்கள் நீதி மய்ய தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தாலே ஒரு முதிர்ச்சி தன்மை வெளிப்படுகிறது. இதில் ஒருசில வாக்குறுதிகள் பிரதான கட்சிகள் கூட இதுவரை தெரிவிக்காதது ஆகும்!அதுபோலவே அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலும் உள்ளது!
வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பிரபலங்களாக இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளை ஏற்கனவே கையில் எடுத்தவர்களாக உள்ளனர். மக்களிடம் தொழில் ரீதியாக, சமூக அக்கறை மூலமாக நெருக்கமான தொடர்பில் உள்ளவர்களாகவே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.. புதுவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
போலீஸ் அதிகாரி
அவர்களில் ஒருவர்தான் ஏஜி மவுரியா. இவர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி. ஆனால் அன்று வேலை பார்த்ததெல்லாம் என்னவோ இதே வடசென்னையில்தான்! 90'களில் ஆந்திர கொள்ளை கும்பலை ஒழித்துகட்டியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. ரவுடிகளை ஒழிக்க நியமித்த திறமையான அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
தாக்கம்
எத்தனையோ பேரை பிடித்து உள்ளே தள்ளி வன்முறைகளை தடுத்து நிறுத்தியவர். பல ரவுடிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தந்த போலீஸ் அதிகாரி இவர். இதனால் வடசென்னை மக்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை அன்றைய காலகட்டத்திலேயே ஏற்படுத்தியவர்.
வடசென்னை மக்கள்
குறிப்பாக வெகுஜன மக்கள், காய்கறி விற்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் என அனைவரிடமும் கரிசனத்தை அன்று காட்டினார். அதனால்தானோ என்னவோ, இன்று ஓட்டு கேட்டு போகும்போது இவரை அடையாளம் கண்டு ஓடிவருகிறார்கள் வடசென்னை வாசிகள்! அவர்களிடம் உரிமையாக வாக்கு கேட்டு வருகிறார் மவுரியா!
நல்லா பாருங்க
வடசென்னையில் ஒரு சில டீக்கடைகளில் மவுரியா டீ குடிப்பது வழக்கமாக இருந்தது. அங்கெல்லாம் மவுரியா மறக்காமல் சென்றார். ஒருவேளை தொகுதி மக்கள் மறந்துவிட்டாலும்,"என்னை தெரியுதா? நல்லா பாருங்க.." என்று வாஞ்சையுடன் கேட்கிறார். அடையாளம் கண்டுபிடித்த நபர்களோ, "சார்.. நீங்களா.. எப்படி இருக்கீங்க.. உங்களை எங்களால் மறக்க முடியுமா?" என்று பாச மழை பொழிகிறார்கள்.
எப்படியோ.. வடசென்னை மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் மவுரியா மூலம் கண்டிப்பாக தீர்க்கப்படும் என்று பெரும்பாலான தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்களாம்!