போலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு
சென்னை: காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்க வேண்டும் என்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவை வரவேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம். பெரும்பாலும், சனிக்கிழமை அல்லது ஞாயிறுகளில் விடுப்பு வழங்கப்படும்.

அத்தியாவசிய துறைகளில் பணிபுரிவரக்ளாக இருந்தால், சுழற்சி முறையில் வாராந்திர ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு போலீசாருக்கு மட்டும் வார விடுப்பு என்பது இல்லாமலேயே இருந்தது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி-இன் இந்த உத்தரவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சைலேந்திரபாபுவின் இந்த உத்தரவை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவலர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த உத்தரவை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications