யார் உங்கள் வேட்பாளர்?.. "டார்ச்லைட் வெளிச்சத்தில் தேடும்" கமல்ஹாசன்.. சென்னையில் கலக்கல் போஸ்டர்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் யார் வேட்பாளர் என்ற கேள்வியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வென்றது. அதிமுக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் வென்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக, அமமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான இடங்களில் வென்றனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது. இதில் அதிமுக ஒரு அணியாகவும் திமுக இன்னொரு அணியாகவும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கட்சி அங்கீகாரம்
ஒவ்வொரு கட்சியும் இந்த தேர்தலில் தனது இருப்பை தக்க வைக்கவும் கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன. "சீரமைப்போம் தமிழகத்தை" என்கிற கோஷத்துடன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி, ஒவ்வொரு தேர்தலிலும் அந்த முழக்கத்தை முழங்குகிறார்.

சீரமைப்போம் தமிழகத்தை போஸ்டர்
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையி்ல மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் உங்களின் வேட்பாளர் யார் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில் கமல்ஹாசன் கையில் டார்ச்சுடன் இருக்கும் புகைப்படமும் உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இந்த போஸ்டர் மூலம் கமல்ஹாசன் தனது கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் தற்போது போஸ்டர் மூலம் சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். இந்த போஸ்டரில் யார் உங்கள் வேட்பாளர் என இருக்கிறது. அவரை கமல் டார்ச் அடித்து தேடும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கவுன்சிலர் யார்?
இதன் வரவேற்பை பொருத்து உங்கள் கவுன்சிலர் யார் என்ற போஸ்டரும் ஒட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன. அது போல் உங்கள் கவுன்சிலர் நேர்மையானவரா, உங்களுக்காக உழைப்பவரா, சுயநலமில்லாதவரா, போன்ற கேள்விகள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தன. இந்த தேர்தலிலாவது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதி தேர்வு செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications