மக்களே ரெடியா.. அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையில் வெளுக்கப்போகுது மழை.. 19 மாவட்டங்களுக்கு வார்னிங்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது.
பருவமழை தொடங்கியதும் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. சென்னையில் சில தினங்களாக கொட்டி தீர்த்து வெள்ளக்காடாக்கியது.
வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 3% குறைவு..டிச.8க்கு மேல் அதி கனமழை ஆட்டம் ஆரம்பம்
காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகம் முழுவதுமே நல்ல மழை பெய்து மக்களின் மனதை குளிர்ச்சி படுத்தியது. தொடக்கத்திலேயே நல்ல மழை பெய்தாலும் அடுத்தடுத்த நாட்களில் மழை குறைந்துவிட்டது. குறிப்பாக நவம்பர் பிற்பகுதியில் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவியது. கடுமையான பனிப்பொழிவும் இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த சூழலில் கடந்த 5 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
மாண்டஸ் புயல்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது. அதைப்போலவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.இதையடுத்து நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் இந்த பெயரை பரிந்துரைத்துள்ளது. சென்னையில் இருந்து 640 கி.மீட்டர் தூரத்தில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்தில்
நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் இந்த புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையை கடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நல்ல மழை பெய்வதுடன் கரையை கடக்கும் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 10 மணி வரை மேற்கண்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகம்மூட்டத்துடன் காணப்படும் நகரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 வேகத்தில் இடையிடையே 70 கி. மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
லேசானது முதல் மிதமான மழை
நாளை தமிழ்நாடு முழுவதும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.