பாஜக பவர் காலியாம்.. தமிழ்நாட்டுக்கு மோடி, அமித் ஷா வருவதே இதனால் தான்.. ஸ்டாலின் பரபர பேட்டி!
சென்னை: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதனால் தான் தமிழ்நாட்டை குறி வைத்து வருகிறார்கள் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பரபர தேர்தல் பணிகளுக்கு இடையே முன்னணி ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், வட மாநிலங்களில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து இழப்பை ஈடுகட்ட முயற்சிக்கின்றனர் எனக் கூறியுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேட்டி: இந்த பேட்டியின்போது பேசியுள்ள ஸ்டாலின், "யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை முடிவு செய்வதே இந்த தேர்தல். குஜராத் மாடல், வளர்ச்சி நாயகன் என்ற முகமூடியுடன் பிரதமர் மோடி களமிறங்கினார். முகமூடி நழுவி விழுந்து, இன்று அவர் "ஊழல் மோடி" என அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். மோடி தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த நாட்டையும் சிதைத்ததால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.
நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் நம் நாட்டில் நீடிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மோடியே மறுக்கவில்லை. ஒருபுறம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மறுபுறம் தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறார் மோடி. எனவே அவரை வெற்றி பெற விடக்கூடாது என திமுக கூட்டணிக்கு மக்கள் மகத்தான வரவேற்பை அளித்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில்: மேலும் பேசியுள்ள ஸ்டாலின், "பாஜக பலமாக இருந்த வட மாநிலங்களிலேயே மோடி அரசு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அதனால்தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தென் மாநிலங்களுக்கு அடிக்கடி வருகை தந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு, வட மாநிலங்களில் இழக்கும் சீட்களை தென்னிந்தியாவில் ஈடு கட்ட முயல்கின்றனர்.
தெற்கில், குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவின் சித்தாந்தம், மக்களின் மனநிலைக்கு எதிரானது. அதனால்தான் மோடி மற்றும் அமித்ஷாவின் ரோடு ஷோ இங்கு தோல்வியடைந்தது. அதேசமயம், எங்களது பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர்.
கட்டுக்கதை: 2016க்கு பிறகு அதிமுகவை பலவீனப்படுத்தி தாங்கள் பலம் பெற பாஜக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது என்று ஒரு கட்டுக்கதையை உருவாக்க ஊடகங்களின் உதவியோடு முயற்சி நடக்கிறது. ஆனால் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசியுள்ள ஸ்டாலின், "வட மாநிலங்களில் பாஜகவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மாநிலங்களில் உள்ளூர் பிரச்சனைகளால் பாஜக பெல்ட் உடைந்துவிட்டது. லோக்சபா தேர்தல் முடிவுகள் மூலம் அது நிரூபிக்கப்படும்.
மோடி மீது கோபம் இல்லை: தனிப்பட்ட முறையில் மோடி மீது எந்த விரோதமும் இல்லை. அவர் ஒரு தவறான சித்தாந்தத்தின் பிரதிநிதி. ஒரு பிரதமராக, அவரது சிந்தனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. சர்வாதிகாரியாக நடந்துகொண்டு மாநிலங்களை அழிக்க முயற்சிக்கும் அவரை எதிர்க்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை நானும் அவருடன் ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேம். என்னுடன் சாதாரணமாக உரையாடினார். எனது கோபம் தனிப்பட்ட மோடி மீது அல்ல, அவர் பின்பற்றும் சித்தாந்தத்திற்கும், எங்களுக்குமானது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications