சிரித்தபடி ஸ்டாலின் காதில் சொன்ன மோடி.. செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் கை பிடித்து பேசிய முதல்வர்
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாமல்லபுரம் சிற்பத்தை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேடையிலேயே அவரை தொட்டு சிரித்து பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் சென்னையில் இன்று தொடங்கி இருக்கிறது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்கின்றனர்.
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை தமிழ்நாடு அரசு பிரபலப்படுத்தியும் வருகிறது.

பிரதமர் மோடி வருகை
இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திலிருந்து ஐ.என்.எஸ். விமானம் மூலமாக மாலை சென்னை வருகை தந்து இருக்கிறார்.

பிரபலங்கள்
பிரதமரின் வருகை சற்று தாமதமானாலும் குறித்த நேரத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா தொடங்கி இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யனாதன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க மற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கு என தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் சினிமா பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அணி வகுப்பு
இதில் அணிவகுத்த 186 நாடுகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தன. ஆனால், இந்தியாவிலிருந்து மட்டும் பலர் இதில் கலந்துகொண்டனர். பிங்க் நிற உடையணிந்து அணிவகுத்த இந்திய வீரர்களை கண்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்து வரவேற்றார். அரங்கமும் கரகோசத்தால் நிரம்பியது. இந்த நாடுகளின் கொடியை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றிபெற்று தேர்வு செய்யப்பட்ட 186 மாணவர்கள் ஏந்திச்சென்றனர்.

சிரித்துப் பேசிய மோடி, ஸ்டாலின்
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை அணிந்து செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வருகை தந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரம் கோயில் வடிவிலான நினைவு பரிசை வழங்கி கவுரத்தார். பின்னர் ஸ்டாலின் அருகே அமர்ந்த மோடி காதில் ஏதோ சொல்லி சிரித்தார். இதனை கேட்ட ஸ்டாலினும் சிரித்துக்கொண்டே மோடியை தொட்டுப்பேசி சிரித்தார். விழா மேடையில் நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.












Click it and Unblock the Notifications