இந்தியாவின் உழைப்பை கண்டு உலகத் தலைவர்கள் வியப்பு- பிரதமர் மோடி பெருமிதம்
Recommended Video
சென்னை: இந்தியாவின் உழைப்பை கண்டு உலகத் தலைவர்கள் வியக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 9 மணிக்கு சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தம்பிதுரையையும், சி விஜயபாஸ்கரையும் தட்டிக் கொடுத்து மோடி பேசினார்.

தமிழை போற்றுவோம்
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மோடி பேசுகையில் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் ஆகும். அத்தகைய பழமையான மொழியான தமிழை போற்றுவோம்.

சாதனை
நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக ஐஐடி திகழ்கிறது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன். உங்கள் வெற்றியில் பெற்றோர் உழைப்பு உள்ளது. உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

நம்பிக்கை
அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களுடன் உரையாடினேன். இந்திய இளைஞர்களின் திறமைக்கு பின்னால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையை கண்டு உலகத் தலைவர்கள் பிரமிக்கின்றனர்.

உழைப்பு
இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையை கண்டு உலகமே வியக்கிறது. உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம். சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல் சிறந்த குடிமக்களாகவும் இருக்க வேண்டும்.

ஆர்வம்
இதுவரை இங்கு 200 ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாகனம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில்கள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு , உறக்கம், உணவின்றி மாணவர்கள் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறப்பு
ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி சென்னை சிறந்து விளங்குகிறது.

ஆரோக்கிய குறைபாடு
உலகின் டாப் 3 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடின உழைப்பால் முடியாததையும் முடியக் கூடியதாக மாற்றும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. முயற்சி, திறமை, அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களுக்கு சரியான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாழ்க்கை முறை நோய்கள் தான் எதிர்காலத்தில் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன.

வாழ்த்துகள்
தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் வழிகளை கண்டுபிடிப்பது அவசியம் ஆகும். மருந்துக்கு எப்படி காலாவதி தேதி இருக்கிறதோ அது போலவா மனித வாழ்க்கையும் என யோசிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications