"அந்த காமராஜரே மோடிதாங்க.." கட்சியை இணைத்த கையோடு.. காண்போர் கண்களை குளமாக்கிய சரத்குமார் பேச்சு
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்துவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்துள்ள சரத்குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார். பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார்.

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என்று கூறியுள்ளார்.
மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன். இது நம் நாட்டின் எழுச்சியின் தொடக்கம். வலிமையான அரசு வலிமையான பாரதம் அமைய இணைந்து செயல்படுவோம் மோடியின் கரத்தை வலிமைப்படுத்துவோம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி காமராஜர் ஆட்சி நடத்துவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு கட்சி தொடங்கி 17 ஆண்டு காலம் தமிழக அரசியலில் பயணித்த சரத்குமார் தேசிய அரசியலில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications