’இந்தியா’வில் குழப்பம்: மீண்டும் மோடி ஆட்சி! திமுகவுக்கு நெருக்கடியா?
சென்னை: மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திமுகவின் நிலை என்ன ஆகும் என்பது பற்றிய விவாதம் இப்போது எழுந்துவருகிறது.
மோடி ஆட்சிக்கு எதிராகக் கட்டி எழுப்பப்பட்ட 'இந்தியா' கோட்டைக்குள் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அதை எப்படி அடைப்பது என்பது தெரியாமல் தவித்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

'நிதிஷ்குமார் விலகிவிடுவார் என்பது எங்களுக்கு எப்போதோ தெரியும்' என்கிறார் மல்லிகார்ஜுன கார்கே. தெரிந்து அவரை 'இந்தியா' கூட்டணி கூட்டங்களில் ஏன் பங்கு பெற அழைத்தார்கள் என்பது புரியாத புதிர்.
சொல்லப் போனால், 'இந்தியா' எனக் கோட்டை நிதிஷ்குமாரின் கனவில் உருவானது. அவர்தான் அதற்காகப் பலகட்ட முயற்சிகளை எடுத்தார். அந்த முயற்சிக்குப் பின்னால் அவருக்குப் பிரதமர் கனவு இருந்தது.
அந்தக் கனவைக் காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. ஆகவேதான் 'பாட்னா' இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பேசிய இந்தி பேச்சை மொழிபெயர்த்த போது உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த நிதிஷ்குமார், கடைசியாக நடை பெற்ற கூட்டத்தில், 'புரியவில்லை.

ஆகவே மொழிபெயர்க்கச் சொல்லுங்கள்' என டி ஆர் பாலு கோரிக்கை வைத்ததற்கு, 'இந்தி தெரியாமல் ஏன் இந்தியாவில் இருக்கிறீர்கள்?' என்று நிதிஷ் கொந்தளித்ததாகச் செய்திகள் பரவின.
தமிழ்நாட்டில் 'இந்தி தெரியாது போடா' எனத் தைரியமாக டி ஷர்ட் போட்டுக் கொண்ட திமுக தலைவர்கள், அந்த 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் அமைதி காத்தனர். அவர்களுக்கு அதைவிட்டால் வேறு வழி இல்லை.
மோடியை மிகக் கடுமையாக எதிர்த்த சக்திகள் மொத்தம் இரண்டுதான். ஒன்று, ஸ்டாலின். இரண்டு, திமுக. மம்தா மோடியை விமர்சிப்பார். அதே வேகத்தில் அமைதியாக அரவணைப்பார்.

நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் லூலுவை விமர்சித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து வென்ற நிதிஷ்குமார்தான், அடுத்த சில வருடங்களில் பீகாரில் லூலுவின் 'மகாகத்பந்தனா' கூட்டணிக்குள் வந்தார்.
பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்து மக்களைச் சந்தித்த நிதிஷ்குமார், அக்கட்சிக்குத் துரோகம் செய்து விட்டு லாலு பிரசாத் அணிக்குத் தாவிய போது அதை யாரும் துரோகம் எனச் சொல்லவில்லை.
ஆனால், இப்போது மீண்டும் தாய் கூட்டணிக்கே திரும்பியதைத் துரோகம் எனச் சொல்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?

சொல்லப் போனால் பழைய பாதைக்கு அவர் திரும்பி இருக்கிறார். தன்னை விமர்சித்து வாக்கு கேட்டு வெற்றி பெற்ற நிதிஷை எப்படி லாலு தன் கூட்டணிக்குள் வைத்துக் கொண்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
சொல்லப் போனால், பாஜக எந்த மாநிலத்தில் எவ்வளவு பலமான கூட்டணி இருந்தாலும் அதற்குள் ஒரு ஓட்டையை உருவாக்கிவிடுவதில் கில்லாடியாக உள்ளது.
பீகாரில் 'மகாகத்பந்தனா' கூட்டணியைச் சிதைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கு முன் மகாராஷ்டிராவில் 'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணியைத் தரை மட்டமாக தகர்த்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இடம்பிடித்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தம்பி மகன் அஜித் பவாரிடம் பறிகொடுத்துவிட்டு அதோ கதியாக அமர்ந்திருக்கிறார் சரத்பவார்.

ஆட்சியை ஏக்நாத் சிண்டேவிடம் பறிகொடுத்து விட்டு உட்கார்ந்திருக்கிறார் உத்தவ் தாக்ரே. இப்போது அதேநிலைதான் பீகாரில் உருவாகி உள்ளது.
மோடியை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இப்போது வலு இழந்து வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தலுக்குள் மோடி எதிர்ப்பு என்பது இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
மிகக் கடுமையாக மோடி எதிர்ப்பை கையில் எடுத்திருந்த திமுக, நிதிஷ்குமார் வெளியேறிய பிறகு அமைதியாகப் பிரச்சினையைக் கையாள ஆரம்பித்திருக்கிறது.
ஒருவேளை மீண்டும் பாஜக வென்று மோடி பிரதமரானால், திமுகவின் நிலை என்ன ஆகும் என்பது பற்றி இப்போது பலரும் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.

திமுக இந்த விசயத்தில் அனுபவம் உள்ள கட்சி. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள பழமையான கட்சிகளில் ஒன்று. 1949இல் உருவான இந்தக் கட்சி மிசா, சர்காரியா கமிஷன், ராஜீவ் படுகொலை, உட்கட்சியில் பிளவு, 2ஜி ஊழல் வழக்குகள் எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
மேலும் கட்சி பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகி வெற்றி பெறுவதில் அனுபவம் உள்ள கட்சி. இந்தக் கட்சியின் இருப்பு என்பது சாதாரணமானதல்ல. பல நுட்பங்களை அறிந்த கட்சி.
ஆகவே, அக்கட்சியால் மோடியை எளிமையாக டீல் செய்து விட முடியும் என்கிறார்கள் அரசியல் அனுபவசாலிகள். இது குறித்து பத்திரிகையாளர் மணி, "கட்சியை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வாழ்வதற்கான வழிமுறைகளை அதிகம் அறிந்துவைத்துள்ள கட்சி அது.

பதவி வந்துவிட்டால், அதைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அடிமட்டம் வரை இறங்குவார்கள். இது அவர்களின் கடந்த கால வரலாறு. இந்தியாவிலேயே ஆட்சியை இழந்த ஒரே கட்சி திமுகதான். 2முறை ஆட்சியை இழந்தார்கள்.
1996இல் கருணாநிதி முதல்வராக ஆன பிறகு என்ன செய்தார்? 1999இல் பாஜகவுடன் போய்ச் சேர்ந்தார். அதுதான் திமுகதான். பாஜக மதவாதக் கட்சி இல்லை என்றார் கருணாநிதி. ஆர் எஸ் எஸ் ஐ சமுதாய இயக்கம் என்றவர் கருணாநிதி.
கேட்டால், குறைந்த பட்ச உத்தரவாதத்தில் அடிப்படையில் ஆதரித்தோம் என்பார்கள். இவர்கள் கூட்டணியிலிருந்த காலத்தில் தான் குஜராத் கலவரம் நடந்தது. 3 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பிரச்சினை மக்களவையில் எதிரொலித்தது.

2002 மே மாதம் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்கெடுப்புடன் கூடிய கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் வந்தபோது, திமுக வாஜ்பாயையும் மோடியையும் ஆதரித்துப் பேசிய பேச்சுகள் நாடாளுமன்ற குறிப்புகளில் இன்றும் உள்ளன.
அதன்பின்னர் வாஜ்பாய் அரசு காணாமல் போகப்போகிறது என்று தெரிந்த பிறகு அப்படியே வெளியே வந்து காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டுகள் கூட்டணியிலிருந்தது திமுக. இவர்களின் கடந்த கால வரலாறு என்பது தஞ்சாவூர் பொம்மையைப் போன்றது. எப்படி கீழே போட்டாலும் எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அந்தப் பொம்மை. அதைப் போன்றதுதான் திமுக.

ஆகவே, மோடி திரும்ப வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், திமுக என்ன செய்யும் என்பதை மக்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
ஒரு பக்கம் அரசியல் ரீதியாக மோடியை எதிர்க்கிறார்கள். இன்னொரு பக்கம் அதானியை தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க அழைத்து வாய்ப்பு தருவது. ஒரு உதாரணம்.

இதே அதானி மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்தர் ஸ்டாலின். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மின்சாரம் வாங்கியதில் முறைகேடு உள்ளது. ஆகவே அதை விசாரிக்க வேண்டும் என்றவர். ஸ்டாலினே பேசினார். அறிக்கைகளை வெளியிட்டார். மோடியின் பிடியிலிருந்து தப்பிக்க திமுகவிடம் நிறையப் பாதுகாப்பு படகுகள் உள்ளன" என்கிறார்.














Click it and Unblock the Notifications