4பேர் பலி..9,280பேர் மீட்பு..3 மாவட்டத்தை புரட்டிய ‛மாண்டஸ்’..புயல் நிவாரணம் எப்போது?அமைச்சர் பதில்
சென்னை: மாண்டஸ் புயல் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், 9,280 பேர் மீட்கப்பட்டு 205 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கூறினார்.
மேலும் சேதம் தொடர்பான கணக்கெடுப்பு பணி துவங்கிய நிலையில் நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றியும் அவர் விபரமாக விளக்கினார்.
மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மிககனமழை.. சென்னையையும் விடாதாம்..புது அப்டேட்
தமிழகத்தை கடந்த புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் முறிந்துள்ளன. மேலும் கடற்கரை பகுதிகளில் இருந்த படகுகள் சேதப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ஆய்வு
இந்நிலையில் தான் சென்னையில் மாண்டஸ் புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். வடசென்னை பகுதியில் அமைச்சர், அதிகாரிகளுடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புயல் பாதிப்பில் இருந்து தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
9,280 பேர் மீட்பு- 4 பேர் பலி
இந்நிலையில் தான் தமிழகத்தில் புயல் பாதிப்பு பற்றி வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பட்டியலிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 205 நிவாரண மையங்களில் 9,280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் தற்போது வரை 4 பேர் இறந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இன்றே இயல்பு நிலை திரும்பும்
மின்கம்பங்கள், படகுகள் சேதமடைந்துள்ளன. இதுபற்றிய கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. புயலால் அதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த அளவுக்கு உயிர் சேதம், கட்டட சேதங்கள் ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்றே இயல்புநிலை திரும்ப மாவட்ட நிர்வாகம், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று இரவு 12 மணிக்கு கேட்டார். இன்று காலையில் கேட்டார். இதனால் இயல்பு நிலைக்கு தமிழகத்தை கொண்டு வர பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
2 நாட்களில் நிவாரணம்
புயல் பாதிப்பு, சேதம் பற்றிய கணக்கெடுப்புக்கு பிறகு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒருநாள் அல்லது 2 நாளில் நிவாரணம் வழங்கும் பணி துவங்கும். புயலால் விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார்.