அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.. 2026ல் நாங்கதான்.. அடித்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி
சென்னை: "தமிழகத்தில் தற்போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026ல் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து, பேசுகையில் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ அதிமுக கூட்டணியை ஆதரியுங்கள்.
2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும்.
திமுகவின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதனையும் கிடப்பில் போட்டுவிடுவார்கள். அதிமுக ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திமுக செயல்படுத்தி வருகிறது.
அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மேலும், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகளும் மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சாரும்.
2010 ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்த அதிமுக அரசு நீதிமன்றம் மூலம் முயற்சித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications