கிணத்தை காணோம் ஸ்டைலில் புது திருட்டு! 600 டவர்களை ஆட்டைய போட்ட பலே கில்லாடிகள்! போலீசார் அதிர்ச்சி
சென்னை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த செல்போன் டவர் சேவை நிறுவனம் ஒன்று போலீஸில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொபைல் இன்றி அமையாது உலகு என்ற ரேஞ்சுக்கு இப்போது நாம் மாறிவிட்டோம். காய்கறி ஆர்டர் தொடங்கி பண பரிமாற்றம் வரை இப்போது அனைவரும் மொபைல் போனையே பயன்படுத்தி வருகிறோம்.
மொபைல் போன்கள் வேலை செய்ய டவர்கள் தேவை. இந்தியாவில் இரு வகையில் டவர்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

டவர்
முதல் வகை ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களே நேரடியாக டவரை அமைத்து நிர்வகிப்பது. மற்றொரு முறை நாடு முழுவதும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் வாடகை முறையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது. நேரடியாக நிர்வகித்தால் செலவு அதிகமாகும் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் வாடகை முறையிலேயே டவர்களை நிர்வகித்து வருகின்றன.

மும்பை நிறுவனம்
இந்தச் சூழலில் 2017 முதல் செயல்படாமல் இருந்து செல்போன் டவர்கள் அப்படியே திருடப்பட்டுள்ளதாக செல்போன் டவர் அமைக்கும் நிறுவனம் புகார் அளித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட அந்த தனியார் நிறுவனம், நாடு முழுக்க 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் அந்த நிறுவனத்திற்கு 6000க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன.

கொரோனா காலம்
இந்த தனியார் டவர் சேவை நிறுவனம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தங்கள் சேவையை நிறுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த டவர்கள் முடங்கின. இருப்பினும், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

மாயம்
தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தில் டவர்களை மற்ற நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள டவர்கள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது சில மாவட்டங்களில் ஒட்டுமொத்த டவர்களுமே மாயமாகி இருந்து. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

600 டவர்கள்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் இதேபோல பல இடங்களில் டவர்கள் மாயமாகி உள்ளது தெரிய வந்தது. தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி உள்ளது தெரியவந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் இருந்ததைப் பயன்படுத்தி டவர்கள் திருடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் புகாரில் குறிப்பிட்டுள்ளது.

பல நூறு கோடி நஷ்டம்
ஒரு செல்போன் டவரை அமைக்க 25 முதல் 40 லட்ச ரூபாய் வரை செலவாகும். தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி உள்ள நிலையில், இதனால் தங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக தங்கள் நிறுவனத்தின் பல டவர்கள் திருட்டுப் போகி உள்ளதால், டவர்களை பாதிக்காக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications