முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.. திடீர்னு பரவிய "குரல்".. யாரந்த பெண்? சாட்டையை சுழட்டிய பெரம்பலூர்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, தவறான தகவலை பெண் அதிகாரி பரப்பியுள்ளார். என்ன நடந்தது?
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது... இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது. அதனால்தான், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார்..
விரிவாக்கம்: இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது. இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி, காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.. மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்திருந்தார்.
சபாஷ் பணிகள்: அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நெகிழ்ந்து சொல்லி உள்ள நிலையில், இன்றைய காலை உணவு விரிவாக்க திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திட்டம் குறித்துதான், ஒருவர் தவறான தகவலை பரப்பியிருக்கிறார்.. பெரம்பலூர் மாவட்டத்தில், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் மேனகா என்பவர் இதுகுறித்து தவறான தகவலை பகிர்ந்துள்ளார்.
ரவை, சேமியா: அதாவது, "வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க, சமையல் கேஸ், ரவா, சேமியா போன்ற பொருட்கள் தட்டுப்பாடு இருக்கிறது.. இப்போதைக்கு அந்த பொருட்கள் ஸ்டாக் இல்லை.. அதனால், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஸ்பான்சர் பெற்று, உணவு தயாரியுங்கள், இதைவிட்டால் வேறு வழியில்லை, கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருக்கிறார்" என்று மேனகா சக பணியாளரிடம் வாட்ஸ்அப் போனில் பேசியிருப்பதாக தெரிகிறது.
இந்த குரல் பதிவின் ஆடியோ, இணையத்தில் கசிந்து வைரலாகிவிட்டது.. இந்த ஆடியோ பேச்சை கேட்டதுமே, மாவட்ட கலெக்டர் கற்பகம், இதற்கு உடனடியாக மறுப்பு சொன்னதுடன், இது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தினார்.
அதிரடி சஸ்பெண்ட்: இந்நிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications