பள்ளியில் “பிரேக் ஃபாஸ்ட்”.. அரசு பள்ளி மாணவர்கள் “ஹேப்பி”! ஸ்டாலின் பிறந்தநாளில் ஸ்வீட் நியூஸ்
நேற்று மேலும் 500 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை: மேலும் 500 பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில் இன்று அது பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வந்து இருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் இந்த திட்டத்தை நேற்று விரிவாக்கம் செய்தார்.
தமிழ்நாட்டில் ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படித்து உயர் பதவிகளில் அமர மதிய உணவுத் திட்டம் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் இந்த மதிய உணவு திட்டம் பல்வேறு வகைகளில் தரம் உயர்த்தப்பட்டது.

காலை உணவு திட்டம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்டார்.

ஏழைகளுக்கு பயன்
இந்த காலை சிற்றுண்டி திட்டம் கூலித் தொழிலுக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு பெரும் பயனாக அமையும் என்றே பேசப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும், பாதியிலேயே படிப்பை கைவிடுவதை தடுக்கவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

1547 பள்ளிகள்
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 1,547 அரசு ஆரம்ப பள்ளிகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1,14,095 மாணவர்கள் பயனடைந்தனர். இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மதுரையில் இதனை தொடங்கி வைத்த ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

மேலும் 500 பள்ளிகள்
இந்த காலை சிற்றுண்டி திட்டம் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. பல்வேறு கட்டங்களாக அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மேலும் 500 பள்ளிகளில் நேற்று காலை உணவுத் திட்டம் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

உணவருந்திய மாணவர்கள்
மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள 500 பள்ளிகளில் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications