அடமான நகைகளுக்கு வட்டியில்லை.. நகைக்கடன் வேணுமா? சென்னை ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் வழக்கில் கோர்ட் அதிரடி
சென்னை: அடமான நகைகளுக்கு வட்டியில்லை என்று கூறி மோசடி நடைபெற்றதையடுத்து, இதுசம்பந்தமான விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. என்ன நடந்தது ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்ட் லோன் நிறுவனத்தில்?
கடந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம், சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் செய்த மோசடியாகும்.. ஏஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் துணை நிறுவனம் ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள், நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறது.. அத்துடன், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்திருக்கிறது.

கவர்ச்சி விளம்பரங்கள்
இந்த கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்த பலரும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் முதலீடு பணத்தை ஏமாற்றி மோசடி செய்தனர். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில், நொளம்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நிறுவனம் சுமார் 500 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சுமார் ரூ.1500 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததையடுத்து, ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
நகைக்கடன், அடமானம்
இந்நிலையில், சென்னை முகப்பேரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்ட் லோன் என்ற நிறுவனம் சம்பந்தமான வழக்கு விசாரணை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது..
அதாவது, ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்ட் லோன் என்ற நிறுவனம், நகைக் கடன் வழங்குவதாகவும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு முதல் 12 மாதம் வட்டி இல்லை என்றும் விளம்பரம் செய்திருந்ததை நம்பி, பலர் தங்கள் நகைகளை வைத்து பணம் பெற்றனர். பிறகு,தாங்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை மோசடி செய்ததாக அடமானம் வைத்தவர்களே புகார் தந்திருந்ததால், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நிதி நிறுவன மோசடி வழக்குகள்
இந்த நிலையில், இந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மோசடியில் சிக்கி நகையை பறிகொடுத்த தன்னையும் ஒரு புகார்தாரராகச் சேர்க்கக்கோரி, முகப்பேரைச் சேர்ந்த ஜூடி இன்பண்ட் என்பவர் சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகானந்தம், இதுகுறித்து போலீசார் பதில் தருமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அலெக்ஸாண்டர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தில் மனுதாரர் உள்ளிட்ட ஏராளமானோர் அடமானம் வைத்த நகைகளை 3 வங்கிகளில் மறு அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். அந்த வங்களில் நிறுவனம் பராமரித்து வரும் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் வங்கி கணக்குகள் மீண்டும் திறக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
வரும் 21ம் தேதி ஒத்திவைப்பு
இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பூ.வேலுமணியன், இ.பிரவீன் ஆகியோர் ஆஜராகி நகையை மீட்டு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி கணக்குகளை மீட்பது, அடமான நகைகள் தொடர்பான விவரங்களுடன் வரும் 21ம் தேதி விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications