Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூலப் பத்திரம் நகலை வைத்து பத்திரப்பதிவு செய்யலாமா? அசல் ஆவணங்கள் வேணுமா? அரசுக்கு பெயிரா வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும்போது அதற்குண்டான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை மாற்றியமைத்து, பதிவுத்துறை சட்டப்பிரிவு 55A இல் திருத்தம் செய்திட வேண்டும் என்று தமிழக பதிவுத்துறைக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி கடிதம் மூலம் தன்னுடைய கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

mother document tn registration department

பெயிரா வேண்டுகோள்: "தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு எமது பணிவான வணக்கங்கள்... தமிழ்நாடு பதிவு துறையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போலி ஆவணங்களை தடுப்பதற்கான பல சட்ட திட்டங்களை வகுத்து பல மாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பதிவு சட்டப்பிரிவு 55(A) அரசாணை எண்:129 இன் மூலம் கடந்த (05/09/2022) முதல் அசல் ஆவணங்களின்றி பதிவு செய்யக்கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வந்து, தற்போது நடைமுறையில் உள்ளது.

மேலும், தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைனில் பதிவை மேற்கொள்ளும் பொதுமக்கள், அதற்குண்டான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதிவுத்துறை தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் சுற்றறிக்கை எண்:22482/C1/2021 தேதி:14/09/2022 இல் வெளியிடப்பட்டு அதுவும் தற்போது நடைமுறையில் உள்ளது

பதிவு சட்டபிரிவு 55(A) விதிகள் நடைமுறைப்படுத்தபட்டதன் காரணமாக, அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களது சொத்துக்களை பதிவு செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே தமிழகம் முழுவதும் பதிவுச்சட்ட பிரிவு 55(A) விதியினால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஃபெயிரா கூட்டமைப்பின் சார்பாக, கடந்த 18.11.2022 அன்று FAIRA கடித எண்:017/2022 எழுதிய கடிதத்தின் வாயிலாக, பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் எதிர்கொண்ட, ஒரு சில சம்பவங்களையும் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய பதிவாளர்கள் மறுத்ததற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டி, பதிவுத் துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

வருவாய் பதிவேடுகள்: மேலும், பொதுமக்கள் தங்களின் அசையா சொத்துக்களை பதிவு செய்வதற்கு அசல் ஆவணங்களை தவறவிட்ட இனங்களில், அவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் வருவாய் பதிவேடுகளின் அடிப்படையிலும், இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் அடிப்படையிலும், சொத்தை வாங்குபவரின் சுய விருப்பம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையிலும், மேற்கண்ட நிகழ்வுகளில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பிரச்சனைக்கு சரியான கொள்கை முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டியும் விரிவாக கடிதம் எழுதியிருந்தோம்.

மீண்டும் FAIRA கடித எண்;013/2023, தேதி:13.05.2023 அன்று எழுதிய கடிதத்தின் வாயிலாக 55A சட்ட பிரிவின் கீழ் அசல் ஆவணம் இன்றி பதிவு செய்ய இயலாது என்கிற சட்ட பிரிவில், பதிவுத்துறை தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்பின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து சுற்றறிக்கை வெளியிட்டு உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தோம்.

சொத்து விற்பனை: பொதுவாக பதிவுத்துறையில் கடந்த அக்டோபர் திங்கள் 2000 ஆண்டுக்கு முன்பு வரை சொத்தை விற்கும் உரிமையாளர் மட்டுமே ஆவணத்தில் கையொப்பம் இடுவது போதுமானதாக இருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் விற்பவர் மற்றும் வாங்குபவர் என இருவரும் கையெழுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை, வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படத்தை, ஆவணத்தில் ஒட்டி பதிவு செய்யும் வகையில் சட்ட நடைமுறையும் இருந்தது. பிறகு 2012 ஆம் ஆண்டு முதல், வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படத்தை பயோ மெட்ரிக் விடியோ ஃபிங்கர் பிரிண்ட் ரெக்கார்டிங் சிஸ்டம் (BIO METRIC VIDEO FINGER PRINT RECORDING SYSTEM) முறையில், இடது கை பெருவிரல் கைரேகை மற்றும் கண்களின் கருவிழியையும் பதிவு செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.

சாட்சி கையொப்பம்: மேலும், வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சி கையொப்பம் இடுபவர்கள் ஆகியோர்களின் ஆதார் அடையாள அட்டையை ஆவணங்களுடன் இணைக்கும் வகையில் பதிவுத்துறை தலைவர் அவர்களின், சுற்றறிக்கை எண்:22049/C.S1/01/17 தேதி:08.07.2021-இல் வெளியிடப்பட்டு, அந்த சட்டமும் நடைமுறையில் உள்ளது.

அதேபோன்று, போலி ஆவணம் தயாரிக்கும் ஆவண எழுத்தர் மற்றும் பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது பதிவு சட்டப்பிரிவு 22 ஏ மற்றும் 22 பி மூலம் குற்ற நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமில்லாமல் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது.

மேலும், துணிகரமாக போலி ஆவணங்களை தயாரித்து பதிவு செய்தால், அதனை பதிவு சட்டப்பிரிவு 77A மூலம் தமிழ்நாடு அரசு சட்ட எண் 41/2022 தேதி 16/08/2022 கடித எண் 33760/01/2022 தேதி 27/09/2022 மூலம் மாவட்ட பதிவாளரே விசாரணை மேற்கொண்டு ரத்து செய்யும் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றம் அதனை ரத்தும் செய்துள்ளது. பதிவுத்துறை தரப்பில் மீண்டும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மீண்டும் போலி ஆவணத்தை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் சட்டத்தை கொண்டு வந்து உறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.

அதுமட்டுமல்ல, அசல் ஆவணம் வைத்திருப்பவர் ஏதோ ஒரு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், அந்த ஆவணம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் அவரின் கையொப்பத்துடன் சான்றிட்ட ஆவண நகலை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது.

சொத்துக்கள்: சொத்துக்களை வாங்கி வைத்துள்ள பொதுமக்களிடம் உள்ள ஆவணம் தனிநபர் ஆவணம் (PRIVATE DOCUMENT). மற்றும் பதிவுத்துறையிடம் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பொது ஆவணம் (PUBLIC DOCUMENT) இதற்காக தான் பதிவுத்துறை சார்பில் பதிவுத் கட்டணமும் பெறப்படுகிறது என்பதும் தங்களுக்கு நன்கு தெரியும்.

தற்பொழுது இந்த 55A சட்ட பிரிவின் கீழ், அசல் ஆவணம் இன்றி பதிவு செய்ய இயலாது என்கிற பதிவுத்துறையின் உத்தரவு, பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி அசல் ஆவணத்தை தன் வசம் வைத்துக் கொள்ளும் உரிமையாளர்களுக்கு, ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதோடு, மட்டுமின்றி பினாமி சட்டத்தை ஊக்குவிக்க கூடிய வகையில் உள்ளது.

கடன் பத்திரம்: அது மட்டுமல்ல கடன் கொடுப்பவர்கள் அசல் ஆவணத்தை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பதிவு அலுவலகத்தில் அடமான கடன் பத்திரத்தை பதிவு செய்ய விலக்கு அளிப்பது போன்று இந்தச் சட்டம் உள்ளது. இதனால் பதிவுத்துறைக்கும் வரக்கூடிய வருவாயும் இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்படுகிறது.

மேலும், இந்த சட்டம் அடாவடித்தனத்தையும், அராஜகத்தையும் முன்னெடுத்து அசல் ஆவணத்தை அபகரித்து வைத்து கொள்பவர்களை ஊக்குவிக்க கூடிய வகையில் உள்ளது. அப்படியே அசல் ஆவணத்தை களவாடி தன் வசம் வைத்துக் கொள்பவர்கள், அந்த ஆவணத்தை பயன்படுத்தி, அவரே கையொப்பமிட்டு பதிவு செய்ய இயலுமா என்றால், அது இயலாது என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

களவாடப்படும் ஆவணங்கள்: மாறாக களவாடிய ஆவணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு திருப்பித் தருவதற்கு, குண்டர்களின் உதவியோடு சமரசம் செய்து அவரிடம் பணம் பறிக்கும் செயலும் நடந்தேறி இருக்கின்றது. இந்த சட்டத்தின் மூலம் தற்பொழுது, நகைகளை திருடுவதை விட அசையா சொத்துக்களில் அசல் ஆவணத்தை திருடும் குற்ற செயல் கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், அசல் ஆவணம் தொலைந்து விட்டாலோ, களவாடப்பட்டாலோ அது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் செய்து, தினசரி நாளிதழ்களில் அது குறித்து விளம்பரம் வெளியிட்டு, காவல்துறையிடம் இருந்து (NON TRACEABLE CERTIFICATE) கண்டுபிடிக்க முடியாத சான்று பெற்று வந்தால் தான் பதிவு செய்ய இயலும் என்கிற பதிவுத்துறையின் சுற்றறிக்கை ஏற்புடையதல்ல.

மன உளைச்சல்: இதனால், பொதுமக்கள் பலமுறை காவல் நிலையத்திற்கு அலைந்து திரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதோடு, மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதோடு, காலம் நேரம் வீண் விரையமும், மனச்சங்கடமும் ஏற்படுகிறது. காரணம், காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஆவணத்தை தவறவிட்ட பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.

உதாரணமாக ஆவணத்தை எப்படி எடுத்துக் கொண்டு சென்றீர்கள், எத்தனை மணிக்கு, எந்த சாலையில், எந்த இடத்தில், எடுத்துக் கொண்டு போனீர்கள், அப்பொழுது எந்த கைபேசி எண்ணை பயன்படுத்தினீர்கள், அந்த கைபேசி எண் குறித்த புவியியல் சுயவிவரம் (GEOGRAPHICAL PROFILE), கண்காணிப்பு கேமரா பதிவு (CCTV SURVEILLANCE), என இவையனைத்தையும் விசாரித்த பிறகு, காவல்துறையினரும், புகார் தாரரிடம் சம்பந்தப்பட்ட சார் பதிவாளரை அணுகி, தவறவிட்ட ஆவணத்தின் சான்றிட்ட நகலை பெற்று வரச் சொல்லி, அதன் அடிப்படையில் தான் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத சான்றினை ( NON TRACEABLE CERTIFICATE) வழங்குகிறது. இதற்கு காவல்துறை வருடக்கணக்கில் காலதாமதம் செய்கின்றனர்.

பதிவுத்துறை: மேலும் காவல்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்:Rc.no.2029209/General.1(1)/2022 தேதி:01.04.2022 இன்படி நடந்து கொள்வதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பதிவுத்துறையின் மேல் இருக்கும் நன்மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகின்றது. பொதுமக்கள் இதனால் தங்களின் மருத்துவ செலவு உள்ளிட்ட அவசிய அத்தியாவசிய தேவைகளுக்காக, கூட தங்களின் அசையா சொத்துக்களை விற்க நினைக்கும் பொதுமக்கள், உடனடியாக விற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்படி அசல் ஆவணங்கள் இன்றி தங்களது சொத்துக்களை விற்க முடியாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் தரப்பிலிருந்த நியாயத்தை உணர்ந்து, அவர்களின் நலன் கருதி, பல வழக்குகளில் அசல் ஆவணங்கள் இல்லாத பட்சத்திலும், பதிவு செய்ய மறுக்காமல், பதிவு துறையில் உள்ள பொது ஆவணம் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் பத்திர பதிவு செய்யலாம் என தீர்ப்புகள் வழங்கி உள்ளனர்.

மூல பத்திரம்: மேலும், சமீபத்தில் அசல் ஆவணத்தை தவறவிட்ட நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாமென்றும் மற்றும் காவல்துறையினரின் கண்டறிய இயலாச்சான்று (Non Traceable Certificate) பெற தேவையில்லையென்றும், சென்னை உயர்நீதிமன்றம் (WA:1160/2024) நாள் 27.09.2024 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதனையும், தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எனவே, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர், அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத்துறை சார்பில் பாதுகாத்து வைத்திருக்கின்ற பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை உறுதி செய்து, பொது மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பத்திரப்பதிவு எளிமையான முறையில் பதிவு செய்யும் வகையில், தகுந்த வழிகாட்டு சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டுமென, ஃபெயிரா கூட்டமைப்பின் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்" என்று டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+