குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கிய தாய்
சென்னையில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: வாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை நகரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி தினேஷ் - ரக்ஷிதா. இவர்களுக்கு 3 வயதில் ருத்ரா என்ற மகன் இருக்கிறார்.
இவர்களது வீடு கோடம்பாக்கத்தில் உள்ளது. தினேஷ் ஒரு விஞ்ஞானி ஆவார். சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, தினேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவே இல்லை. இதனால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரக்ஷிதா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.
அவரது மகன் ருத்ரா கட்டிலில் பிணமாக சாய்ந்து கிடந்தான். அவனது முகம் வெந்துபோய் இருந்தது. இதை பார்த்து கதறி துடித்த தினேஷ் உடனடியாக வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், ரக்ஷிதா மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்தனர். முதல்கட்ட விசாரணையில், ரக்ஷிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அதனால்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.