ஊரகப்பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்தில் கல்வி! சிவ் நாடார் டீமுடன் கைகோர்க்கும் பள்ளிக்கல்வித்துறை!
சென்னை: ஊரகப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்று (22.02.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட பள்ளிக்கல்வித் துறைக்கும், சிவ் நாடார்அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளையால் நிறுவப்படவுள்ள உண்டு உறைவிட பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத்தரம் வாய்ந்த கல்வியை மாணவ / மாணவிகள் பெறுவர்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பயின்று சிறந்த கல்வி சூழலையும், கல்வி கற்கும் திறன் மேம்படுவதற்கான பயிற்சியினையும் பெறுவர். மாணவிகள் 50% வாய்ப்பு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மாணவர்கள் தகுதியான உயர்கல்வியை தொடர்ந்து பயின்று வருங்காலங்களில் அறிவுத்திறன்மிக்க இளைஞர்களாக வளர்வதற்கு இவ்வொப்பந்தம் பேருதவியாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., சிவநாடார் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக சுந்தர், பேனர்ஜி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்தாண்டு கூடுதல் நிதியாக 44,042 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், விழுதுகள் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மணற்கேணித் திட்டம், இல்லம் தேடிக்கல்வித் திட்டம், நம்பள்ளி நம்பெருமை, நான் முதல்வன் என எண்ணற்றத் திட்டங்கள் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications