சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே சிறப்பு.. ஸ்டாலின் புகழாரம்
சென்னை: மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் திரு என்.சங்கரய்யா அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. என்.சங்கரய்யா அவர்களின் 98வது பிறந்த நாளையொட்டி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின்போது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பல்லாவரம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

அத்துடன், திரு. என்.சங்கரய்யா அவர்களின் 98வது பிறந்தநாளினையொட்டி, வாழ்த்துச் செய்தியையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பழுத்த அனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெரியவர் திரு என்.சங்கரய்யா அவர்களுக்கு 98-ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாக காட்சியளிப்பவர். ஏழை-எளிய அடித்தட்டு மக்களின்- உழைக்கும் பாட்டாளிகளின் உரிமை குரலாக ஒலிப்பவர். நேர்மையான அரசியலின் நிலை கண்ணாடியாகப் பொதுவாழ்வில் திகழ்பவர் என்.சங்கரய்யா என புகழாரம் சூட்டியுள்ளார் .
மேலும் பொதுவாழ்விற்கு தேவையான அருங்குணங்களை பெற்றவருக்கு 98-ஆவதுபிறந்த நாள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களுடனும், திராவிட முன்னேற்ற கழகத்துடனும் மிகுந்தநட்பு பாராட்டி, இன்றைக்கும் தோழமையின் சிகரமாக விளங்குபவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி - தி.மு.க. உறவு, அரசியல் ரீதியான உறவு ஆகியவற்றையெல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு என்றுதலைவர் கலைஞர் அவர்களுடனான தனது நட்பு பற்றி சங்கரய்யா அவர்கள், "இந்து" ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இன்றும் தம் நினைவில் நிலைத்து நிற்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்
திரு.சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு. இது நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். அய்யா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து நீடூழி வாழ வேண்டும், வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி வாழ்த்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications