முத்ரா லோன்.. நிர்மலா சீதாராமனின் ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.. மறுபடியும் வந்த செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழகத்தில் 2023 -24-ம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது? அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் கோவை சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முத்ரா கடன் தொடர்பாக பேசியிருந்தார்.. இந்தியா நாடு முழுவதும் 49.5 கோடி வங்கி கணக்குகள் இருப்பதாகவும், மொத்தம் 29.76 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

முத்ரா கடன்: மேலும், தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு ரூபாய் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேருக்கு ரூபாய் 13 ஆயிரத்து 180 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவைக்கு கடந்த 11, 12-ந் தேதிகளில் வருகை புரிந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதுவரை நாடு முழுவதும் 49.5 கோடி வங்கி கணக்குகள் இருப்பதாகவும்,வும், மொத்தம் ரூ.29.76 லட்சம் கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறியதோடு கோவை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேருக்கு ரூ.13 ஆயிரத்து 180 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
மக்கள் தொகை: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 41.43 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள். இதில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறுவதும், அதேபோல நாடு முழுவதும் 31 கோடி குடியிருப்புகள் இருக்கிற நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறியிருப்பதும், ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்றுதான் கூறவேண்டும்.
நிர்மலா சீதாராமன் கூறியபடி முத்ரா கடன் வழங்கப்பட்டு இருந்தால், தொழிற்சாலைகள் பெருகியிருக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கும், மக்களின் வாழ்க்கைத் தரமும் கூட உயர்ந்திருக்கும். அப்படி எதுவும் நிகழவில்லை என்றபோதே நிர்மலா சீதாராமனின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்பதை உறுதியாக கூற முடியும்.
புள்ளிவிவர மோசடி: நாட்டின் நிதியமைச்சர் பொறுப்புமிக்க பதவியில் அமர்ந்து கொண்டு அடிப்படை ஆதாரமே இல்லாமல் பொது மேடையில், அதுவும் தொழில்முனைவோர்கள், அதுவும் கோவை மாநகர தொழில்முனைவோர்கள் கூட்டத்தில் ஒரு புள்ளிவிவர மோசடியை நிகழ்த்தியிருப்பதை கண்டிக்கத்தக்கது.
எனவே, கள நிலவரத்திற்கு விரோதமாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிற கூற்றை நிரூபிக்கிற வகையில் தமிழகத்தில் 2023 -24-ம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது? அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
அவப்பெயர்: அப்படி அவர் வெளியிட தவறினால் தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் ஏமாற்றிய அவப்பெயருக்கு அவர் ஆளாக நேரிடும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.












Click it and Unblock the Notifications