முகிலனை கடத்தி அடைத்து வைத்து துன்புறுத்தினர்.. நேரில் சந்தித்த பிறகு மனைவி பூங்கொடி பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை: முகிலன் கடத்தி வைக்கப்பட்டு அடைத்து துன்புறுத்தப்பட்டதாக அவரது மனைவி பூங்கொடி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக செயல்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரயிலில், புறப்பட்டார். அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என்பது புரியாத புதிராக இருந்தது.
இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் நேற்று அவர் ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதை அறிந்து, சிபிசிஐடி போலீசார் அவர்களை தொடர்புகொண்டு முகிலனை தங்கள் காவல் கட்டுப்பாட்டுக்கு எடுத்துள்ளனர்.
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை முதல், முகிலனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது முகிலன் மனைவி பூங்கொடி அவரை சந்தித்து பேசினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பூங்கொடி கூறியதாவது: அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. தான் துன்புறுத்தப்பட்டதாக என்னிடம் தெரிவித்தார்.
தான், கடத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை.
கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது. இவ்வாறு பூங்கொடி தெரிவித்தா.ர் முன்னதாக, கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், முகிலன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நாளை கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.