முகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்
முகிலன் காணாமல் போன வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் பதில் அளித்துள்ளனர்.
சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, சிபிசிஐடி தரப்பினர் ஆஜராகி சொல்லும்போது, "இந்த வழக்கில் இதுவரை 148 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவரை கண்டால் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் துண்டறிக்கைகளும் தரப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில்வே போலீசார் இன்னும் முழு கேமரா சாட்சிகளை ஒப்படைக்காமல் உள்ளதால் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் முகிலன் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றனர்.
பின்னர் முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இதையடுத்து வருகிற 18 ம் தேதிக்கு இதன் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications