கசப்பான முடிவா.. கண்டிப்பான முடிவா? மேயர் தேர்தலில் கூட்டணிகளுக்கு ஸ்டாலின் போடும் கண்டிஷன்- செக்?
சென்னை: வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வாய்ப்பு இல்லை என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
முக்கியமாக அதிக அளவில் மேயர் பதவிகளை கைப்பற்ற வேண்டும். திமுகவின் முக்கிய தலைகளை இங்கே களமிறக்க வேண்டும் என்பதில் கட்சி தலைமை உறுதியாக இருக்கிறதாம்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்
இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சியையும் ஒதுக்குவதில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும், ஆளும் கட்சியில் இருந்து மேயர் இருந்தால் அரசின் திட்டங்களை எளிதாக செயல்படுத்த முடியும் என்பதாலும் மாநகராட்சிகளை கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஒதுக்க வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

மேயர் அவசியம்
அரசின் திட்டங்களை மாநகராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்த மேயர்கள் அவசியம். அவர் நம்ம கட்சியாக இருந்தால் எளிமையாக இருக்கும். கூட்டணி கட்சியாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சென்று பேச வேண்டியதாக இருக்கும். இது திட்டங்களை தாமதப்படுத்தும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி பதவிகளை திமுக ஒதுக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன. இதை பற்றி திமுக நிர்வாகிகள் சிலர் கூட்டணி கட்சிகளிடம் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

ரெடி
அதற்கேற்பத்தான் திமுகவின் மா.செ.க்களுக்கு தலைமையிடம் இருந்து முக்கிய உத்தரவு சென்றுள்ளதாம். அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்ற மேயர் வேட்பாளர்களாக திமுகவினரையே களமிறக்க அறிவாலயம் திடமாக முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து தற்போது திமுகவின் மா. செக்கள் படை தேர்தலுக்கு ரெடியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வாரிசுகள்
முக்கியமாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களின் வாரிசுகளை மேயர் வேட்பாளராக களமிறக்க காய்களை நகர்த்தி வைத்திருக்கிறார்களாம். இதற்கு ஏற்றபடி கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆவடி நாசர் போன்ற சிலர் பெரிய திட்டங்களை போட்டு வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

திருச்சி
திருச்சி மாநகராட்சி பெண்களுக்கானது என்றாலும் அதனை ஆண்களுக்காக மாற்றலாமா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நேரு தரப்பில் இருந்து விவாதித்ததாக ஒரு தகவல் ஓடுகிறது. அங்கு நேருவின் குடும்பத்தினர் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு என்று தகவல்கள் வருகின்றன.

கூட்டணி கட்சிகள்
இது கசப்பான முடிவாக இருந்தாலும் திமுகவிற்கு நிர்வாக ரீதியாக இது அவசியமான முடிவு என்று திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளிடம் பேசி அவர்களை சமாதானம் செய்வோம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணி கட்சிகள் திமுக மீது அதிருப்தியில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications