கூச்சமேயில்லாமல்.. 'ஆரியர்களை' புனிதப்படுத்தி விடலாம் என்ற நினைப்பா.. ஆளுநருக்கு முரசொலி கண்டனம்
ஆளுநர் ரவிக்கு முரசொலி நாளிதழ் கடுமையான கண்டனம் தெரிவித்து கட்டுரை வெளியிட்டுள்ளது
சென்னை: அவதூறு வரலாற்றை ஆளுநர் ரவி, கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது என்றும், ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக, முறையாக எப்படி நடத்துவது என்று தெரியாத நிலையில் அது நடந்து முடிந்திருக்கிறது என்றும் முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.
மாநில அரசு அனுப்பி வைக்கும் ஆவணங்கள் மற்றும் மசோதாக்களில் ஆளுநர் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழக அரசு முன்வைத்து வருகிறது. மேலும், ஆளுநர் பல்கலை கழக விவகாரங்களில் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

பொன்முடி
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மாநில அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது... எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அமைச்சர் பொன்முடியும் அதிரடியாக அறிவித்திருந்தார்... அதேபோல, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

விந்தியமலை
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசிபோது, "திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், மேற்கில் இருப்பவர்களை ஆரியர்கள், தெற்கில் இருப்பவர்களை திராவிடர்கள், இந்தியாவை மண்டலங்களாக பிரித்து மதம், பொருளாதாரம் காரணமாக ஆங்கிலேயர்கள் பிரித்து ஆண்டனர்" என்றார்.. இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது... திராவிடம், ஆரியம் தொடர்பாக ஆளுநர் பேசியதற்கு திமுகவின் முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.

முரசொலி
இது தொடர்பாக முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் இதுதான்: "ஆளுநர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் அவதூறு வரலாற்றை கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக எப்படி நடத்துவது எனத் தெரியாமல் அது நடந்து முடிந்திருக்கிறது. இணை- வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்திருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி
நடத்தை விதிமுறைகள் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு. அமைச்சரை கெளரவ விருந்தினராக அழைத்தது மிகத் தவறானது. அதனை சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளவில்லை. வெளிப்படையாக கண்டித்தும் திருத்திக்கொள்ள முன்வரவில்லை. நாங்கள் செய்வது தான் சட்டம் என்ற போக்கே காரணம். நான் பேசுவதுதான் வரலாறு என்ற அடிப்படையில் ஆளுநர் பேசுகிறார். வேலூர் விழாவில் வாய்க்கு வந்ததை வரலாறாக ஆளுநர் பேசினார்.

டிஆர் பாலு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அப்போதே விரிவான விளக்கத்தை கொடுத்தார். திராவிடர் என்ற அடையாளம் ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தியது என்பதை மனு, மகாபாரத உதாரணங்களுடன் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டினார். இதனை உணர்ந்து தனது பேச்சை திரும்ப பெற்றிருக்கவேண்டும். அதை செய்யாமல் அதே கருத்தை மதுரையிலும் சொல்லி இருக்கிறார்.
Recommended Video

பூனைக்குட்டி
இதனை ஏன் பேசிவருகிறார் என்ற பூனைக்குட்டி மதுரையில் வெளியே வந்துவிட்டது. இந்தியாவில் பிரிவினையை விதைத்தவர்கள் ஆரியர்கள் என்பது வரலாற்று அடிச்சுவடிப்பாடம் ஆகும். அதனை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர். அதற்காகத்தான் அவராக வரலாறுகளை திரித்துச் சொல்லிக்கொண்டு வருகிறார். ஆங்கிலேயர்கள்தான் எல்லாப் பிரிவினைக்கும் காரணம் என்று சொல்லி பதியவைத்துவிட்டால், ஆரியர்களை புனிதப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்" என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications