ராஜீவ் கொலை வழக்கு.. 6 பேர் விடுதலையில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொண்ட ஆளுநர்கள்.. முரசொலி அட்டாக்
சென்னை: கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் என 6 பேர் விடுதலையை முரசொலி சுட்டிக் காட்டி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முரசொலியில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன். ஜெயக்குமார். ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யலாம் என்று 2018 ஆம் ஆண்டே தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்காத நிலையில் இத்தகைய முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது. இதே வழக்கில் பேரறிவாளன் முன்பே விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தீர்ப்பை மையமாக வைத்தே இவர்கள் ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். அரசியல் சாசன பிரிவு 161ன் படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

அமைச்சரவை முடிவு என்ன?
அரசியல் சாசனப் பிரிவு 161 படி ஆளுநர் செயல்படாமல் இருந்தது அல்லது விவரிக்க இயலாத காலதாமதத்தை ஏற்படுத்தியதால் அந்தப் பிரச்சினை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது. இதனை உச்ச நீதிமன்றம் முழு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் சாசனம் 142 வது பிரிவு வழங்கியுள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்துள்ளது. எனவே, அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பு இவர்கள் ஆறு பேரின் வழக்கிலும் பொருந்தும் என்பதை கருத்தில் கொண்டு அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லையே
"நீங்கள் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பதற்காக பேரறிவாளன் சிறையில் இருக்க முடியாது. அவரை உடனடியாக விடுதலை செய்து விடுவேன்" என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு சொன்னார். அப்படி இழுத்தடிக்கவோ, மாநில அரசின் நிலைப்பாட்டை நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் எதுவும் இல்லை என்றும் அப்போதே நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு கூறியது. தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஆளுநர் அனுமதி தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை நிதிபதிகள் அப்போதே கடுமையாகக் கண்டித்தார்கள். " தானே முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறானது. இது இந்த நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரான மிக மோசமான முன்னுதாரனமாக அமைகிறது" என்று நிதிபதிகள் குறிப்பிட்டார்கள்.

அமைச்சரவையின் முடிவு
"அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்பாரா ஆளுநர்?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். நீங்கள் முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவதற்காக. இடையில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். "ஆளுநர் நிலைப்பாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. விடுதலை செய்யும் தீர்மானம் என்பது ஆளுநரின் முடிவு அல்ல. அது ஒரு அரசாங்கத்தின் முடிவு. அமைச்சரவையின் முடிவு.அந்த முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை" என்பதை ஆணித்தரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்போதே தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

கவர்னர் ஜெனரலாக ஆளுநர்கள்
"அரசியல் சாசனம் பிரிவு 142 இன் படி முழுமையான நீதியை வழங்குவ தற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் உச்சநீதிமன் றம் வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் தண்டிக் கப்பட்ட மேல்முறையீட்டாளரின் விடுதலை விவகாரத்தில் மாநில அமைச்சரவை யின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராக இருக்கிறார். சந்தேகத்துக்கு இடமின்றி இந்த வழக்கில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. எனவே, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட கருத்துகள். இவர்களுக்கும் பொருந்தும்" என்று நீதிபதிகள் நெத்தியில் அடித்ததைப் போல எழுதி இருக்கிறார்கள். பிரிட்டிஷாரைத் திட்டிக் கொண்டே பிரிட்டிஷ் பாணியில் 'கவர்னர் ஜெனரலாக' நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் இதில் நிறைய இருக்கிறது! என முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications