“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தவெகவுடன் காங்கிரஸ் தனது கூட்டணியை மாற்றியது. இது குறித்து திமுக சரமாரியான விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இப்படி இருக்கையில், ராகுல் காந்தி தனது தலையில்.. தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்! என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்திருக்கிறது.

தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் மட்டுமல்லாது இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக கட்சிகளும் தவெக பக்கம் சாய்ந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்தான் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர்களை சந்தித்து கூட பேசாமல், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என.. விட்டுவிட்டு சென்றது. இதனால் திமுக தலைமை கடுமையான அதிருப்தியில் இருந்தது.

Murasoli

வரலாற்று முடிவு

இப்படி இருக்கையில்தான் தற்போது முரசொலி விமர்சித்திருக்கிறது. முரசொலியில் எழுதப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது.

ராகுலின் ஆணவம்

இத்தகைய முடிவை தி.மு.க. எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும். அதிலும் குறிப்பாக, ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்! தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார். அதைப் பச்சையாக வெளிப்படையாகவே செய்தார். இதைச் சகித்துக் கொள்ளும் தேவை தி.மு.க.வுக்கு இல்லை.

மண் அள்ளி போட்டுக்கொண்ட ராகுல்

தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது. தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.

நம்பிக்கைத் துரோகம்

2018 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுலை மேடையில் வைத்துக் கொண்டே பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். இத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்துவதைத் தான், நம்பிக்கைத் துரோகம் என்று தெரியாமல் செய்து வந்துள்ளார் ராகுல்.

ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்து, 'நீங்கள்தான் என் சகோதரர்' என்று சொன்னார் ராகுல். 'நான் யாரையும் சகோதரர் என்று சொன்னதில்லை' என்றார் ராகுல். இது வெறும் நடிப்புதான் போலும். தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவார் என்பதற்காகச் செய்யப்பட்ட நாடகமாகவே கருத வேண்டி உள்ளது.

இரட்டை வேடம்

ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாகப் பேசிவிட்டு, பிரதமர் இருக்கைக்கு வந்து அவரைக் கட்டிப் பிடித்தார் ராகுல். அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டே நாடாளுமன்றத்தைப் பார்த்து கண் அடிக்கவும் செய்தார் ராகுல். அவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய காட்சி அது. அந்த இரட்டை வேடத்தைத் தான் எல்லா மாநிலங்களிலும் நடத்திக் காட்டி வருகிறார் ராகுல்.

தேஜஸ்வீயை முதுகில் குத்திய ராகுல்

பீகாரில் தேஜஸ்வீயை முதுகில் குத்திய காட்சியை யாரும் மறக்க முடியாது. தேஜஸ்வீக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கபளீகரம் செய்வதற்காக அவர்களோடு கூட்டணி போட்டார் ராகுல். தேர்தல் நெருங்கி வரும் போது பிரச்சாரமும் சரியாகச் செய்யாமல் வெளிநாடு போனார் ராகுல். தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும் போதுதான் தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டது. அதை அறிவிக்கவும் ராகுல் வரவில்லை. இறுதியாக பீகாரில் தோல்வியைத் தழுவியது இக்கூட்டணி. இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் ராகுல்தான். இப்படித்தான்ஒவ்வொரு மாநிலத்திலும் அணைத்துக் கெடுக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். அதையே தான் தமிழ்நாட்டிலும் செய்தார் ராகுல்.

ஒத்துழைக்காத ராகுல்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்மொழிவதற்கு முன்னதாகவே அவர் பெயரை முன்மொழிந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ராகுல் பேசினாரா என்றால் இல்லை. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டம் பேசாமல் அடம்பிடித்தார், ஆணவமாக நடந்து கொண்டார் ராகுல்.

தி.மு.க. வென்று விடக் கூடாது

புதுச்சேரியில் திருபுவனை, மங்களம், காலாப்பட்டு, ராஜ்பவன், உழவர் கரை, காரைக்கால் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது. இத்தகைய போட்டி வேட்பாளர்கள், ராகுலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். அதாவது, தி.மு.க. வேட்பாளர்கள் வென்று விடக் கூடாது என்பதற்காக ராகுலே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள்?

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது.

ராகுல் - விஜய்

இவர்கள் புதிதாக ஒருவரோடு சேர்ந்துள்ளார்களே.. அந்த விஜய், காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்ன சொன்னார்? 'சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்' என்று பேசினார். இன்று சில பல கோடிகள் கொடுத்துத்தான் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றாரா விஜய்? காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெற்றது? அதில் ராகுல் எவ்வளவு பெற்றார்? ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி மட்டும்தான் காங்கிரஸுக்கு தரப்பட்ட விலையா? அவ்வளவுதானா?

ராஜ்ய சபா கேம்

தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா. தேர்தலுக்குப் பின்னதாக த.வெ.க.விடம் ஒரு ராஜ்ய சபா. இப்போது ஏதோ ராஜ்யத்தையே பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறது காங்கிரஸ். 'இந்தியா' கூட்டணியை இழந்து, ஒரு ராஜ்ய சபா இடத்தைப் பெற்றுள்ளது காங்கிரஸ். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி இருக்கிறது காங்கிரஸ்.

மான ஈனம்

இவ்வளவுக்குப் பிறகும், 'இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது' என்று சொல்வதற்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் ஜோடங்கருக்கு வெட்கமாக இல்லையா?

மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். கழகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதே இனமானமும், தன்மானமும் தான்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து தி.மு.க. முடிவுகள் எடுப்பது இல்லை. இனமானம், தன்மானத்தை மனதில் வைத்தே முடிவுகளை எப்போதும் எடுக்கும்" என எழுதப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+