அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்...!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் தினா முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இசையமைப்பாளர் தினா, தொடக்கக்காலத்தில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். அவரிடம் இருந்து இசையமைக்கும் திறமையை வளர்த்துக்கொண்ட தினா, சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு சொந்தமாக இசையமைக்கத் தொடங்கினார். நடிகை ராதிகா நடிப்பில் உருவான சித்தி தொடருக்கு ''கண்ணின் மணி கண்ணின் மணி, கதை கேளும்மா'' என்ற பாடலுக்கு டியூன் அமைத்ததன் மூலம் அவரது இசைவாழ்க்கையில் பெரிய திருப்புமுனை கிடைத்தது.

இதையடுத்து பல தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். இப்போது தொடர்களுக்கான முகப்பு பாடலை இசையமைக்க இயக்குநர்களின் முதல் தேர்வாக இருப்பது தினா. இந்நிலையில் ஜெயலலிதா இருந்தவரை அவரது அபிமானியாக இருந்த தினா, அவரது மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் தலைமையை ஏற்று அமமுகவில் இணைந்தார்.
அமமுக பிரச்சாரப் பாடல்கள் அனைத்தும் இவர் தான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், தினகரன் வலிமையானவர், மென்மையானவர் என்றெல்லாம் பேட்டிகளின் போது புகழாரம் சூடி வந்தார். இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தினகரன் மீது வைத்திருந்த நம்பிக்கை தினாவுக்கு விட்டுபோயுள்ளது. மேலும், முக்கிய நிர்வாகிகள் வரிசையாக அமமுகவில் இருந்து விலகியது அவரை மாற்றுக்கட்சிக்கு செல்ல வேண்டும் என உந்தியுள்ளது.

பாஜகவில் இணைந்தால் மட்டுமே எதிர்க்காலம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தூண்டிவிட, கடந்த ஒரு மாதகாலமாக ஆழ்ந்து யோசித்து வந்த தினா, இன்று பாஜகவில் முறைப்படி இணைந்துகொண்டார். சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜக அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார். அப்போது விஜயதசமி வாழ்த்து தெரிவிக்க பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க வந்திருந்தா நடிகர் ராதாரவி. அவரையும் போட்டோவில் நிற்குமாறு பொன்னார் நிற்கவைத்தார்.












Click it and Unblock the Notifications