சட்டசபையை முற்றுகையிட்ட பல்லாயிரம் இஸ்லாமியர்கள்! தேசிய கீதம் பாடி உணர்ச்சி பெருக்குடன் நிறைவு
Recommended Video
சென்னை: தடையை மீறி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தினர். கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக செல்லும் அவர்கள் சட்டசபையை நெருங்கி சென்றனர். அதன்பிறகு அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்
இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தடையை மீறி
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இஸ்லாமியரகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.ஆனால் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்தனர். சென்னையில் நேற்று இரவு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அவசர கூட்டம் நடந்தது.
போலீஸ் குவிப்பு
அந்த கூட்டத்திற்கு பிறகு கூட்டாக அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் அறவழியில், எந்த வகையிலும் வரம்பு மீறாத வகையில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். அனைத்து தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக சென்னையில் இன்று 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ளதையொட்டி சென்னை வாலாஜா சாலையில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் குவிந்தனர். அவர்கள் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டசபை நோக்கி சென்றார்கள் "நிறைவேற்று, நிறைவேற்று, சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று என கோஷம்" பாஜக ஆளாத மாநிலம் எல்லாம் சிஏஏவை எதிர்க்கிறதே, தமிழகம் ஏன் எதிர்க்கவில்லை என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றார்கள். சட்டசபையை நெருங்கிய அவர்கள், உணர்ச்சி பெருக்குடன் தேசிய கீதம் பாடி போராட்டத்தை நிறைவு செய்தனர்.
சேப்பாக்கம் முழுவதும்
முன்னதாக அசம்பாவிதக்ளை தடுக்க சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். 5 ஆயிரம் காவலர்கள் 60 வீடியோ கேமரா, 20 சிசிடிவி கேமரா, 5 டிரோன் கேமரா ஆகியவை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டன. ரிசர்வ் வங்கி சுரங்க பாலம், சென்னை பல்லவன் இல்லம் பகுதியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. நிலைமை சீரான பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.