ஆட்டுக்கறி ரெடியா? சுடச்சுட சிக்கன் பிரியாணி தயார்.. வேட்பாளர் லிஸ்ட்டை "தூக்கும்" கோவை தேர்தல் படை
சென்னை: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பேயே கோவை மாவட்டம் பிஸியாகிவிட்டது.. ஓட்டல்களிலும், கடைகளிலும் தேர்தல் பிரிவினர் படையெடுக்க துவங்கிவிட்டனராம்.. என்ன காரணம்?
தேர்தல் என்று வந்துவிட்டாலே, வேட்பாளர்களுக்கான செலவு தாறுமாறாக எகிறிவிடும்.. தொகுதி மக்களை கவனிக்க வேண்டி, ஏராளமான உபசரிப்புகளும், பரிசுப்பொருட்களும் பிரத்யேகமாக நடைபெறுவது வாடிக்கை.

இதில், சாப்பாடு செலவுகளே ஒவ்வொரு நாளும் எகிறிவிடும்.. டீ, காபி, வடை, இட்லி, தோசை, பூரி, புரோட்டா, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் வரை தொண்டர்களுக்கும், தொகுதிக்கும் களமிறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும்.
தேர்தல் ஆணையம்: இத்தனைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், இந்த சலுகைகள் நடந்து கொண்டேயிருக்கும்.. எனினும், தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் எவ்வளவு வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிடும்.. அதில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு வேட்பாளர் எவ்வளவு ரூபாய் செலவு செய்யலாம் என வரம்பும் நிர்ணயிக்கப்படுவம்.
இப்படித்தான் கடந்த முறை தேர்தலின்போதும், சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ரூ.70 லட்சம் மட்டும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இப்போதும் விரைவில் தேர்தல் வரஉள்ளது... தொகுதிகளில் மனுக்கள் தாக்கல் செய்ததுமே, அந்த வேட்பாளரின் செலவு விவர லிஸ்ட்டை தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருக்கிறது.
பிரச்சார கூட்டங்கள்: அரசியல் கட்சிகள் மக்களை கவர என்ன செலவு செய்கிறார்கள்? பிரச்சார கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு என்ன உணவு வாங்கி தருகிறார்கள்? என்பதையெல்லாம் கணக்கு போட சொல்லியிருக்கிறதாம்.
வேட்பாளர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக செய்த செலவுகளை "கட்சி பெயரில்" எழுதி வைக்க வேண்டும் என்றும் யார் செலவு செய்தார்கள் என விசாரித்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூடுதலாக உத்தரவிட்டிருக்கிறதாம்.
இதையடுத்து, ஒவ்வொரு மாநிலத்திலுமள்ள தேர்தல் பிரிவினர், வேட்பாளர்களின் உணவு பட்டியலை தயாரிக்க ரெடியாகி கொண்டிருக்கிறார்கள்..
வீடியோ: இதுகுறித்து தேர்தல் பிரிவினர் சொல்லும்போது, "குடிநீர் முதல் எல்லாவகையான உணவுகளுக்கும் கணக்கு காட்ட வேண்டும். தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே இந்த கணக்கு நடைமுறைக்கு வந்துவிடும். உணவு விலை விவரங்கள் கடை, ஏரியாவிற்கு ஏற்ப மாறுபடுகிறது என்றாலும், எந்த கடையில் என்ன வாங்கினார்கள்? விலை என்ன? என்பதையெல்லாம் சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்தே வீடியோ பதிவு செய்வோம்" என்கிறார்கள்.
அந்தவகையில், மாவட்ட தேர்தல் பிரிவினர் லிஸ்ட்டில் முதலில் உள்ளது கோவை மாவட்டம்தானாம்.. பல்வேறு கடைகல், விலை பட்டியல்களை வாங்க துவங்கிவிட்டார்களாம்.. டீ, காபி, வடை முதல் சாப்பாடு வரை, 150க்கும் மேற்பட்ட ஓட்டல்களின் விலை பட்டியல் வாங்கி அதை "சராசரி" முறையில் கணக்கிட்டு, அந்த விலையை தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி வைக்க போகிறார்களாம்.
பிரச்சாரங்கள்: பிரியாணிகள் இல்லாத பிரச்சாரங்கள் என்பது நம்ம ஊரில் கிடையாது.. எனவே, ஓட்டு கேட்டு வருபவர்கள் கட்டாயம் பிரியாணி எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது.. ஒருவேளை, தேர்தல் பிரிவு அதிக விலை நிர்ணயம் செய்துவிட்டால், பிரியாணி செலவு ஓவராக எகிறி விடுமே என்று கட்சியினர் இப்போதே கலங்கி கிடக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications