“எனக்கு நடந்தது குழந்தை திருமணம்..” ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை : "எனக்கு நடந்தது குழந்தை திருமணம். எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தவர் அவர்" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்து மதம், சனாதனம் பற்றிய ஆளுநர் ரவியின் கருத்துகள் அரசியல் அரங்கில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில், ஆளுநர் இன்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர் கலந்துரையாடல் : சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ஆளுநர் ரவி, "பாரத நாடு என்பது எந்த ஒரு அரசராலும் உருவாக்கப்படவில்லை. 1947ல் உருவாகவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து மக்கள் சென்று வசிக்கவும், வியாபாரம் செய்யவும், படிக்கவும் பயணம் செய்துள்ளனர். அதற்கு யாரிடமும் அனுமதி கேட்கவேண்டும் என்ற சூழல் இல்லை.
பாரதம் : ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற அரசியல் காரணமாகவே மொழி அடிப்படையில் தற்போது அனைவரும் பிரிந்து உள்ளோம். பாரதம் என்றால் என்ன என்பதை நாம் மறந்து வருகிறோம். பாரதத்தின் உயிர் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கலாச்சார ஒற்றுமைதான்" எனப் பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அப்போது, வாழ்க்கையில் வெற்றி பெறும் நேரத்தில் தோல்வி அடைந்தால் எப்படி அதில் இருந்து மீண்டு முன்னேறுவது என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ரவி பதில் அளித்தார்.
குழந்தை திருமணம் : ஆளுநர் ரவி பதில் அளிக்கையில், "வாழ்வில் தோல்வி என எதுவும் கிடையாது . அது வெறும் சறுக்கல்கள் மட்டுமே. முன்னேற வேண்டும் என நினைப்பது நம்மிடம் மட்டுமே உள்ளது. அதேபோல சறுக்கல்கள் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார்.
எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்க பலமாக இருந்தார். உலகில் தான் எங்கு சென்று திரும்பினாலும் எனது மனைவிதான் எனது பலம். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்" என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications