2024 லோக்சபா தேர்தல்.. நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு.. சென்னை தொகுதிகளில் யார் போட்டி தெரியுமா?
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 3 பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தென் சென்னையில் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை அருகே சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற சீமான் பேசியதாவது: இங்கே யார் சிறுபான்மை? நீங்கள்தான் பெரும்பான்மை; சிறுபான்மை மக்கள் நலக் கட்சி என்பதை மாற்றி தமிழ் மக்கள் நலக் கட்சி என மாற்ற வேண்டும்.

இன்று கிறிஸ்தவராக இருப்பவர் நாளை பிடித்துவிட்டால் இஸ்லாமியனாக மாற முடியும். ஆனால் நான் தமிழன் என்பது மாறாது. உலகின் எந்த ஓரத்துக்கு போனாலும் நான் தமிழன். இதில் ஏன் குழப்புகிறீர்கள்? உலகத்தின் மூத்த குடி ஏன் தன்னைத் தானே குறுக்கிக் கொள்கிறது. தமிழ்நாட்டை கன்னடன் ஆண்டுவிட்டான்; மலையாளி ஆண்டுவிட்டான்; தெலுங்கர் ஆண்டு கொண்டிருக்கின்றனர்; இனி இந்திக்காரன் ஆளப் போகிறான். நீ எங்கே வாழப் போகிறாய்?
நான் எதிர்த்து பேசினால் அய்யோ பாசிஸ்ட், சாவனிஸ்ட்; இனவெறியன் என்கின்றனர். நாங்க அடிபடும் போது எல்லாம் சிரங்கு, சொறியாக இருந்தது உங்களுக்கு? தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீளனும். உளவியல் நோயில் இருந்து எழுந்திருக்க வேண்டும். நமக்குள் திமிர் வரவேண்டும்.
திமுக ஒரு கட்சி என பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 234 தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடுகிறோம்; ஒருபோதும் என் கட்சி பிள்ளைகளிடம் எவ்வளவு செலவு செய்வாய்? எவ்வளவு கட்சிக்கு தருவாய்? என நான் கேட்டிருப்பேனா? புரட்சியின் மாறுதலை பிரபாகரன் மகன்கள்தான் செய்ய முடியும்.. வேறு எவனும் செய்ய முடியாது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மொழிச் சிறுபான்மையினர். மதச்சிறுபான்மையை வைத்து ஏன் கணக்கிடுகிறீர்கள்? 13,14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறேன். கூட்டணி என பேசாதவன் எவன் இருக்கிறான்? இப்பவும் இல்லை.. எப்பவுமே கூட்டணி கிடையாது.. தனித்தே போட்டி. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். 20 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம்.
2024 தேர்தலில் தலைநகர் சென்னையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். ஒருத்தி மத்திய சென்னையில் என் பாத்திமா நிப்பா.. வட சென்னையில் என் தங்கச்சி இளவஞ்சி நிப்பா.. தென் சென்னையில் என் தங்கச்சி நாச்சியாள் சுகந்தி நிப்பா. தலைநகரில் 3 பெண்கள் போட்டி. இதுதான் நடக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications