கருணாநிதி பேனா நினைவு சின்னம்: சீமானின் கை..சீறிய மனுஷ்யபுத்திரன்! மண்டை பத்திரம் என தம்பிகள் பதிலடி!
கருணாநிதி பேனா நினைவு சின்ன விவகாரத்தில் திமுக மனுஷ்யபுத்திரனுடன் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிரட்டியது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் மீது கை வைப்பேன் என்கிற சீமானின் கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் திமுகவின் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

சென்னை மெரினாவில் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். சீமான் பேசுகையில் இந்த நினைவு சின்னத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடலில் 8551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுக்கிறீர்கள். அதில் பேனா வைக்க வேண்டும் என்றால் கல்லைக் கொட்ட வேண்டும்; மண்ணைக் கொட்ட வேண்டும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேண்டுமென்றால் அறிவாலயத்தில் போய் வையுங்கள். நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள்; கடலுக்குள்தான் வைப்பார்களாம். இந்தச் சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில் அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு இருக்காதீங்க. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன் என்றார். இது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் #கலைஞரின்பேனா என்ற ஹேஷ்டேக்கில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் பதிலடி தந்து வருகின்றனர். திமுக ஐடிவிங் செயலாளர் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ, கருணாநிதி எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும், அப்புறம் ... இருக்காது. மீண்டும் சொல்கிறேன், நாகரீக அரசியல் எல்லாம் இதுகளிடம் சரி வராது என காட்டமாக கூறியிருந்தார்.
அதேபோல் திமுகவின் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கை பத்திரம்...அவ்வளவுதான் சொல்ல முடியும் என சீமானை மறைமுகமாக எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர் மண்டை பத்திரம் என்ற வாசகத்துடன் மனுஷ்யபுத்திரனை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications